போலியைப் பொசுக்கும் நெருப்பு!

போலியைப் பொசுக்கும் நெருப்பு!

போராட்டம் என்பது, வெற்றுக் கூச்சல்களோ அல்லது கண்ணீர் கதறல்களோ அல்ல. அது நம் வாழ்வுரிமைக்கான வலி.

போராட்டம் என்பது, வெற்றுக் கூச்சல்களோ அல்லது கண்ணீர் கதறல்களோ அல்ல. அது நம் வாழ்வுரிமைக்கான வலி.  அது எப்படியும் ஒலிக்கலாம். அதற்கென விதிமுறைகளோ, வடிவங்களோ கிடையாது என்பதுதான் மெரீனா புரட்சி நமக்கு சொல்லி சென்ற செய்தி. இளைஞர்கள், மாணவர்கள் திரண்டு எழுப்பிய நெருப்பு, அநீதிக்கு எதிராக ஒன்று திரளாத சமூகத்தையும், வறட்டு மௌனம் காக்கும் போலி ஜனநாயகத்தையும் பொசுக்கும் நெருப்பு என்பதை அதிகார மையங்கள் புரிந்து கொண்டதுதான் இந்த போராட்டத்தின் வெற்றி. அந்தப் போராட்டத்தின் முழு வடிவம்தான் இந்தப் படம்.  படத்தின் டிரெய்லரை ஓட விட்டபடி பேசத் தொடங்குகிறார் இயக்குநர் சந்தோஷ். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உடன்  பல படங்களில் பயணித்தவர். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் சினிமா வரையிலும் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர், இவர் இயக்கும் முதல் படம் "ஜல்லிக்கட்டு'.
 
ஒரு போராட்டம் முடிந்ததும்  அது தொடர்பான பதிவுகள், படங்கள் வருவதை உலகம் நெகிழ்வோடு வரவேற்கும். உங்களுக்கு எப்படி இந்த யோசனை வந்தது?
ஜனவரி 16-ஆம் நாள், தமிழ்நாடு முழுக்க செய்தி பரப்பப்பட்டது. இளைஞனே விழித்தெழு... விடியட்டும் வாடிவாசல். அந்த செய்தி காட்டுத்தீ போல் அலையடித்து பரவியது.  அடுத்த நாளில் மெரீனாவில் பதாகைகளும், கறுப்புச் சட்டைகளுமாக சில நூறு பேரோடு தொடங்கியது இந்தப் போராட்டம். அடுத்தடுத்த நாள்களில் விஷயம் தெரிந்து, தங்களுடைய ஊர்களிலேயே ஒவ்வொருவரும் இது மாதிரியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர். கோவை, மதுரை, திருச்சி, சேலம் என போராட்டத் தீ பரவியது. சிதறிக் கிடந்த கோப நெருப்பு ஓரிடத்தில் குவிந்தது. இலக்கு இல்லாமல், தலைமை இல்லாமல், குமுறிக் கனலும் நெருப்பை ஒன்று சேர்க்க முடியாததுதான் துயரமாக இருந்தது.  ஊழலும் அலட்சியங்களும் பெருகி விட்ட சமூகம், 30 ஆண்டு கால ஈழப் போராட்டம் கண் முன்னே வீழ்ந்த கொடுரம்.. இந்த தலைமுறையின் வரலாற்றை, தமிழ் இளைஞர்களை தாளாத துயரமாக அழுத்திக் கொண்டிருந்தது. அதனால் யாரும் போய் அழைக்கவில்லை. தன்னெழுச்சியாக இளைஞர்கள் தங்களது நட்பு வட்டங்களின் வழியே இதைக் கொண்டு போய் சேர்த்தனர். அப்படித்தான் எனக்கும் செய்தி வந்தது.  நானும் அந்தப் போராட்டத்தில் ஒரு துளியாகத்தான் கலந்து கொண்டேன். நேரம் செல்லச் செல்ல அங்கு நடந்த காட்சிகளில் ஒரு உயிர்ப்பு ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அப்படித்தான் இந்தக் கதையும் கிளர்ந்தெழுந்தது.

போராட்டத்தின் புரிதல்கள் சரி வர இல்லாமல் போனால், கதை அந்நியப்பட்டு விடும்... உணர்வுகளை படமாக்கும் போது யோசிக்க வேண்டிய முக்கிய அம்சம் இது...
ஆமாம், அதை சரி வரப் புரிந்து பதிவு செய்திருக்கிறேன். லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடியது வெறும் ஜல்லிக்கட்டுக்காகத்தான் என நினைத்தால், அதை விட மடத்தனம் எதுவும் கிடையாது. உண்மையில் இன்றைய எங்கள் தலைமுறைக்கான அரசியல் என்பது, உலக மயமாக்கலுக்குப் பிறகான குழப்பமான அரசியல். அதை களைந்து பார்ப்பதற்கான ஒரு களமாக போராட்டக் களத்தைப் நான் பார்த்தேன். அதை விட அதிகாரமும், வெளிநாட்டு நிறுவனங்களும் நம் மீது நிகழ்த்திய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமாகவும் இது இருந்தது என்பதுதான் நிஜம். அதைத்தான் போராட்டக் களம் வெளிப்படுத்தியது. மெரீனா மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுக்கவே அந்நிய குளிர் பாணங்களுக்கு எதிரான தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டதே, அதற்கு சாட்சி. கூடவே கருகும் பயிர்களுக்காக உயிர் விடும் விவசாயிகளுக்காகவும் அவர்களுடைய குரல் ஒலிக்கத் தவறவில்லை. மண்ணைக் காப்பது தொடங்கி அத்தனை பேரும் சர்வதேச அரசியலை எல்லாம் அவ்வளவு எளிமையாக உரையாடினர். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்த குரல்கள் நம் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காப்பதற்கான குரல்களாகவே இருந்தன. நம்முடைய விளையாட்டிலும், குடிக்கும் கோலாவிலும் அரசியல் உண்டு என்ற கல்வியை போராட்டக் களத்தில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதுதான் இதன் வெற்றி. இது எல்லாமும் அப்படியே பதிவாகியிருக்கின்றன. 

சினிமாத்தன்மைக்காக சில விஷயங்களை திரிக்க வேண்டி வந்ததா...
எந்த திரிப்பும் இருக்காது. போராட்டக் களத்தின் தன்மையை உணர்ந்து, அதைக் காட்சியாக்கி அப்படியே பதிவு செய்திருக்கிறேன். தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் இந்தப் போராட்டம் அரங்கேறியிருக்கிறது. அத்தனை இடங்களில் நடந்த போராட்டக் காட்சிகளையும் எடுத்து இதற்கு பிரம்மாண்ட வடிவத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். அவ்வளவு உழைப்பு இருக்கிறது.  

யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்....
 சூர்ய பிரகாஷ், உத்ரா, நிகில், திருநாவுக்கரசு, கமால் இந்த 5 பேரும் போராட்டக் களத்தில் என்னை ஈர்த்தவர்கள். இவர்களுக்குத்தான் கதையின் பிரதான கதாபாத்திரங்கள். அவர்கள் போராட்டதில் கலந்து கொண்ட விதம், அவர்களின் உணர்வுகளுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என கதை போகும்.  மற்றபடி போராட்ட உணர்வுகளே எங்கெங்கும் இருக்கும். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் போராட்டத்தில் இருப்பதைப் போன்று உணருவார்கள்.  பல நெகிழ்ச்சிகளும், சுவாரஸ்யங்களும் கலந்த பதிவாக இருக்கும். 

தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக அமைய வேண்டும்...
படத்தின் ஒரு பகுதிக்காக கென்யா நாட்டின் பழங்குடிகள் வாழும் மசாய் மாரா கிராமத்துக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். அது பெரும் அனுபவம். தமிழர்கள் பயன்படுத்தும் காளைகளுக்கும், மசாய் பழங்குடிகளின் காளைகளுக்கும் பெரும் உருவ ஒற்றுமை உள்ளன. தனித்துவமான அவர்களின் வாழ்க்கையை இந்தப் படத்தின் முக்கிய இடங்களில் பயன்படுத்தியிருக்கிறோம். இதை வெள்ளித்திரையில் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். அதிக நபர்கள் ஒரே ஃப்ரேமில் இருக்கும் படமாகவும் இதுதான் இருக்கப்போகிறது.  15 லட்சம் பேருக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள். 
எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு. இசைக்கு ரமேஷ் விநாயகம், ஒலி வடிவமைப்புக்கு உதயகுமார், படத்தொகுப்புக்கு காசி விசுவநாதன் என நம்பிக்கையான கலைஞர்கள் இப்படத்தின்  பலம். அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு மேற்பார்வை இந்தப் படத்தின் கூடுதல் பலமாக இருக்கும்.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com