தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் விளங்கி வருபவர் அஜய் ரத்தினம். வில்லன், குணச்சித்திரம் என இதுவரை 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவரின் மகன் தீரஜ் ரத்தினம் அடுத்தடுத்து தேர்ந்த இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான "ஈரம்' அறிவழகனின் "ஆறாது சினம்' படத்தில் சிறு வேடம் ஏற்றிருந்த இவர், தற்போது மிஷ்கின் இயக்கி வரும் "துப்பறிவாளன்', அரவிந்த்சாமி நடித்து வரும் "சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். "வில்லன் வேடங்களே பிடிக்கும். அந்த வகையில் என் உடல்வாகுவும் அமைந்துள்ளதால், இயக்குநர்கள் வில்லன் வேடங்களுக்கே தேர்வு செய்கின்றனர். எத்தனை காலம் ஆனாலும், வில்லன்களுக்கு ரகுவரன்தான் ரோல் மாடல். எனக்கும் அவர்தான் ரோல் மாடல். அவர் போல் தனித்துவத்தை உருவாக்க விரும்புகிறேன். பிரகாஷ்ராஜின் நடிப்பும் பிடிக்கும். இருவரையும் போல் தனி அடையாளம் பெறுவேன்'' என்கிறார் தீரஜ் ரத்தினம்.