* கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையிடம், கதர்த் துணியின் சிறப்பைப் பற்றி ஒரு பாடல் எழுதித்தர வேண்டுமென்று சிலர் வேண்டுகோள் வைத்தனர். அவர், தான் அணிந்திருந்த மில் துணிகளை அன்றோடு விட்டுவிட்டு கதர்த் துணியை வாங்கி உடுத்த ஆரம்பித்தார். ஒரு மாதம் கதர் உடுத்தியபின் அருமையான பாடலொன்றை எழுதித் தந்தார்.
* வ.உ. சிதம்பரம் பிள்ளை திருக்குறளையும் அதன் உரைகளையும் ஆழ்ந்து படித்தபின், பரிமேலழகர் வள்ளுவத்திற்கு நேர் பொருள் கொள்ளாமல் மாறுபட்டுத் தனது கருத்தை ஏற்றியிருக்கிறார். ஆனால் மணக்குடவர் நேரடியான பொருள் தந்திருக்கிறார் என்கிற முடிவுக்கு வந்தார். அதன் விளைவாக மணக்குடவர் உரையைத் தாமே பதிப்பித்து வெளியிட்டார்.
* கர்நாடக இசை மேதை மதுரை சோமுவின் சொந்த ஊர் சுவாமிமலையானதால் முருகன் பாடலும், அவர் வளர்ந்த ஊர் மதுரையானதால் மீனாட்சியம்மன் பற்றிய பாடலும், அவரது மனைவியின் ஊர் திருக்கருகாவூரானதால் அவ்வூரின் கர்ப்பரட்சாம்பிகை பற்றிய பாடலும் அவரது கச்சேரியில் தவறாது இடம் பெறும்.
* கம்பன் விழாவில் தோழர் ஜீவா சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தபோது, நாற்பது நிமிடம் முடிந்ததும் சிவப்பு விளக்கு எரிந்தது. அதைப் பொருட்படுத்தாமல் ஜீவா பேசி முடித்தார். தலைமையேற்றவர், "நானே சிவப்பு, எனக்கென்னடா சிவப்பு விளக்கு' என நினைத்து இங்கே எழுபது நிமிடம் பேசிவிட்டார் போலும் ஜீவானந்தம்' என்று கூறினார்.
* நாடகக்கலைஞர் எஸ்.வி. சகஸ்ரநாமம் தனது சொந்த நாடக்குழுவான "சேவா ஸ்டேஜ்' மூலம் பி.எஸ். ராமையா, தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ந. சிதம்பர சுப்பிரமணியம் போன்ற பல இலக்கியவாதிகளின் கதைகளை நாடகமாக அரங்கேற்றியிருக்கிறார்.
-ஆர்.கே.