* நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் "பராசக்தி' என்பது தெரிந்ததுதான். ஆனால், அதற்கு முன்பே முக்கமாலா நடித்த "நிரபராதி' என்ற படத்தில் கதாநாயகனுக்காக "டப்பிங்' குரல் மட்டும் கொடுத்திருக்கிறார் சிவாஜி.
* இசைக்கலைஞர் பாலமுரளிகிருஷ்ணாவிடம் சிலர் "திருவிளையாடல்' படத்தில் நீங்கள் டி.எம்.எஸ்.ஸிடம் தோற்பது போன்ற பாடலைப் பாடலாமா? என்று கேட்டபோது அவர் என் பாடல் தோற்றது டி.எம்.எஸ். பாடலிடம் அல்ல, சிவபெருமானின் பாடலிடம் என்று கூறினார்.
* சிவாஜி கணேசன் நடித்த "அம்பிகாபதி' படத்தின் தயாரிப்பாளர், தியாகராஜ பாகவதரை கம்பராக நடிக்கவைக்க விரும்பினார். ஆனால் பாகவதர் "என்னை அம்பிகாபதியாகப் பார்த்த ரசிகர்கள் அம்பிகாபதிக்கு அப்பாவாக ஏற்க மாட்டார்கள்' என்று கூறி மறுத்துவிட்டார்.
* கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு மேடையில் பேசுவதற்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு "ஒரு துளி நீரும் ஒரு பொறி நெருப்பும்'. கண்ணதாசன் பேசத் தொடங்கியதுமே "ஒரு துளி நீரால் உருவாகும் மனிதனின் வாழ்க்கை ஒரு பொறி நெருப்பில் முடிவடைகிறது' என்று கூறினார்.
* எழுத்தாளர் ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பான "ஒரு பிடி சோறு' தொகுப்புக்கு எழுத்தாளர் தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.) முன்னுரை எழுதியிருந்தார். அது தவிர ஜெயகாந்தனின் அனைத்து நூல்களுக்கும் அவரேதான் முன்னுரை எழுதியுள்ளார். "தி.ஜ.ர. எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் முன்னுரை எழுதலாம். ஆனால் எனக்கு அவர் மட்டும்தான் எழுதியிருக்கிறார் என்கிற தனித்துவத்திற்காகவே நான் வேறு யாரிடமும் முன்னுரை வாங்கவில்லை' என்று கூறினார் ஜெயகாந்தன்.