புகழ் மிக்க சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது.
ஆங்கிலேய நாடாளுமன்றத்தில், 1861-இல் இயற்றப்பட்ட "இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டம்' அளித்த அதிகாரத்தின் அடிப்படையில், விக்டோரியா மகாராணியால், 1862-இல் வழங்கப்பட்ட உரிமைப் பட்டயம் (லெட்டர்ஸ் பேடன்ட்) மூலம் இந்திய நாட்டில் முதலில் மூன்று இடங்களில் உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
கடந்த 1862-ஆம் ஆண்டு, ஜூன் 26-இல் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக சென்னை உயர்நீதிமன்றம்((மற்றவை மும்பை, கொல்கத்தா) நிறுவப்பட்டது. இதன் நீதி பரிபாலணம் தமிழ்நாடு மற்றும் புதுவையை (பாண்டிச்சேரி) உள்ளடக்கியது.
தொடக்கத்தில் "சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்று தான் அழைக்கப்பட்டது. அதன் பிறகு, "மெட்ராஸ் ஹை கோர்ட்' என்று பெயர் மாற்றப்பட்டது.
தற்போதுள்ள உயர்நீதிமன்ற கட்டடத்தின் கட்டுமான பணி நான்கு ஆண்டுகள் வரை நீடித்தது (1888-1892). உயர்நீதிமன்ற வளாக கட்டுமான செலவானது, சுமார் ரூ.12 லட்சத்து 98,163 ஆகும்.
இந்த வளாகத்தில் உள்ள மிக உயரமான மாட கோபுரத்திலிருந்துதான் கலங்கரை விளக்கு செயல்பட்டு வந்தது.
முதல் உலகப்போரின் தொடக்கத்தில், ஜெர்மனியின் எஸ்எம்எஸ் எம்டன் போர்க்கப்பல் குண்டு வீசியது. ஜெர்மன் தாக்குதலில் சேதமடைந்த பல இந்திய கட்டடங்களில், இது மட்டுமே இருக்கிறது என்றே கூறலாம்.
இந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பின், 1878-இல் தான் முதல் முதலாக ஓர் இந்தியர் நீதிபதியாகப் பணியமர்த்தப்பட்டார். தெரு விளக்கில் படித்து, மேதையானார் என்று பலராலும் அந்நாளில் வியந்து போற்றப்பட்ட சர் டி.முத்துசாமி ஐயர் தான் அப்பெரியவர்.
சுமார் 17 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி, 1895-இல் மறைந்த முத்துசாமி ஐயருக்கு ஆங்கிலேய நீதிபதிகளே உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு பளிங்குச் சிலையை நிறுவினர்.
சர்.டி.முத்துசாமி ஐயர், நீதிமன்றத்தில் நடந்து கொண்ட விதம், நீதி தேவதையின் பால் கொண்ட பக்தியால் காலணி அணிந்து கொள்ளாமலேயே 17 ஆண்டுகள் அவர் பணியாற்றினார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிபதிகளுக்கான நூலகம், நீதிமன்ற செயல்பாடுகளுக்கான -இதயம்- என்றே அழைக்கலாம். இந்த நூலகத்தில், சென்னை சட்டங்கள் 1802 (ஙஹக்ழ்ஹள் தங்ஞ்ன்ப்ஹற்ண்ர்ய்) 1803, சென்னை உயர்நீதிமன்ற அறிக்கைகள் 1862 போன்ற பல அரிய ஆவணங்களும், தரவுகளையும் உள்ளடக்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையானது, கடந்த 2004-இல் தொடங்கப்பட்டது.
சட்ட நிகழ்வுகள், தகவல்களை வெளியிடும் -சட்ட செய்தி இதழ்- (Madras Law Journal) உதயமான இடம் சென்னை உயர்நீதிமன்றம். இது தான் முதன் முதலில் தோன்றிய உயர் நீதிமன்ற சட்ட செய்தி இதழாகும். இது தொடங்கிய ஆண்டு 1891 ஆகும்.
ஆங்கிலேயர்களிடமிருந்து, இந்தியா 1947-இல் சுதந்திரமடைந்த பின்னர் பதவியேற்ற 29-ஆவது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற 28-ஆவது இந்தியரும் இந்திரா பானர்ஜியே ஆவார்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர், 2-ஆவது பெண் நீதிபதி(இந்திரா பானர்ஜி) ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1992-ஆம் ஆண்டு (ஜூன்-நவம்பர்) முதல் பெண் தலைமை நீதிபதியாக கந்த குமாரி பட்நாகர் நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்றும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை தமிழ்நாடு மதுரைக் கிளை என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, 2016-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.