வித்தியாசமான முயற்சியாக களம் காணவுள்ள படம் "6 அத்தியாயம்'. கேபிள் சங்கர், அஜயன் பாலா, தியாகராஜன், லோகேஷ், சுரேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகிய ஐந்து பேர் இயக்கிய கதைகளை உள்ளடக்கியதாக இப்படம் உருவாகி வருகிறது. எஸ்.எஸ்.ஸ்டான்லி ,
தமன், விஷ்ணு, "பசங்க' கிஷோர், "குளிர் 100' சஞ்சய், "நான் மகான் அல்ல' வினோத், பேபி சாதன்யா உள்ளிட்ட பலர் இந்தக் கதைகளின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து பேசும் போது... பல குறும்படங்களை ஒன்றிணைத்து "அந்தாலஜி' படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. "6 அத்தியாயம்' திரைப்படத்தில், முதல் முறையாக உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குநர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தின் இறுதியில் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் பாணியான ஹாரர் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. "ஆஸ்கி மீடியா ஹட்' எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.