"பொழுதுபோக்குகளின் ராஜா' என்று அழைக்கப்படுவது அஞ்சல் தலை சேகரிப்பு. உலகம் முழுவதும் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்றாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறுவயதினர் முதல் இளைஞர்கள் வரை பலர் அஞ்சல் தலை மற்றும் அதுதொடர்புடைய பொருள்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அஞ்சல் தலை சேகரிப்போரை ஆங்கிலத்தில் "பிலேட்டலிஸ்ட்' என்று அழைப்பர்.
அயர்லாந்தைச் சேர்ந்த ஜான் பவுர்க் என்பவர்தான் உலகின் முதல் அஞ்சல் தலை சேகரிப்பாளர். அவர் சேகரிக்கத் தொடங்கிய காலத்தில் அஞ்சல் தலைகள் வெளியிடப்படவில்லை. அவர் "ரெவின்யூ ஸ்டாம்ப்' சேகரிப்பதை வழக்கமாக்கினார். 1774}ஆம் ஆண்டு "ரெவின்யூ ஸ்டாம்ப்' சேகரிப்பு புத்தகத்தை அவர் வெளியிட்டார்.
விக்டோரியா மகாராணியின் இளம் வயது முகம் பொறித்த அஞ்சல் தலை, பிரிட்டனில் 1840}ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுவே உலகின் முதல் அஞ்சல் தலை. அப்போதிலிருந்தே அஞ்சல் தலை சேகரிப்பு தொடங்கிவிட்டது.
பிற நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் அஞ்சல் தலைச் சேகரிப்பில் பலர் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். அஞ்சல் தலைகளைச் சேகரிக்கும் பள்ளி மாணவர்களுக்காக, கல்வி உதவித்தொகையை மத்திய அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், 6 முதல் 9}ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வீதம் ஓராண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு அஞ்சல் வட்டாரத்துக்கும் 40 மாணவர்கள் வீதம் நாடு முழுவதும் 920 பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் ஈடுபடுபவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும். அந்தப் பள்ளிகளில் அஞ்சல் தலை மன்றம் இருத்தல் வேண்டும், குறிப்பிட்ட மாணவர் அதில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
இதுதொடர்பான விவரங்களை www.indiapost.gov.in, www.postagestamps.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.