கவனத்துக்குரிய நடிகராக வளர்ந்து வருகிறார் ராண்டில்யா. "பொல்லாதவன்', "ஆதி', "வல்லவன்', "தரகு', "அறியான்', "கேள்விக்குறி' உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ராண்டில்யா, சமீபத்தில் வெளியான "வன்மம்', "143' உள்ளிட்ட பல படங்களில் தனது முத்திரையை பதித்து வருகிறார். ராண்டில்யா பேசும் போது, "எங்கெங்கோ கிராமங்களில் இருந்து சினிமா, மீடியா, இலக்கியம், அரசியல் என லட்சியங்களோடு சென்னைக்கு கிளம்பி வரும் முதல் தலைமுறை இளைஞர்களில் நானும் ஒருவன். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சொந்த ஊர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற இலக்கு வைத்து சென்னை வந்தேன். சினிமாவில் பார்க்காத வேலை என்று எதுவும் இல்லை. கூத்துப் பட்டறையில் வேலை, குறும்படங்கள் எடுப்பவர்களுக்கு உதவுதல், உதவி ஒளிப்பதிவாளர், உதவி இயக்குநர், ஆவணப் படங்களில் வேலை என எந்த நேரமும் சினிமாவை சுற்றியே சுழன்றுக் கொண்டிருப்பேன். அப்படித்தான் ஒரு நாள் வெற்றிமாறன் சார் என் தோற்றத்தை பார்த்து விட்டு, "பொல்லாதவன்' படத்தில் வாய்ப்பு தந்தார். சின்ன கதாபாத்திரம்தான் என்றாலும், அதற்கென்று ஒரு தனித்துவம் இருந்தது. அதைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள். ஒவ்வொன்றிலும் என் அடையாளத்தை வெளிப்படுத்தி வருகிறேன். நல்ல அடையாளம் கிடைத்தால் போதும். 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். தொடர்ந்து வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன். ஒளிப்பதிவு, இயக்கம் தொடர்பான வேலைகளும் சென்று கொண்டிருக்கின்றன'' என்றார் ராண்டில்யா.