"களத்தூர் கிராமம்' படத்தில் கிஷோரின் மகனாக நடித்தவர் நடிகர் மிதுன்குமார். பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகனான இவருக்கு "களத்தூர் கிராமம்' நல்லதொரு அறிமுகமாக அமைந்துள்ளது. சினிமா பிரவேசம் குறித்து மிதுன் பேசுகையில்... " தமிழ் சினிமாவில் தயாரிப்பு தரப்பில் முக்கிய முகமாக திகழ்ந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு என் அப்பா. குடும்பத்தில் பலர் சினிமாவில் இருந்ததால், எனக்கும் சினிமா ஆசை. திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்று விட்டு, பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தேன். அப்படியாக எனக்கு இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. நடிப்பு, இயக்கம் இந்த இரண்டும்தான் சினிமாவில் எனக்கு கனவு. நல்ல சினிமாக்கள் பற்றி பெரும் இலக்குகள் உண்டு. அதற்கு ஓர் அடித்தளமாக இந்தப் படம் அமைந்ததில் மகிழ்ச்சி. ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த வேடங்கள் வந்தாலும், எனக்கு பொருத்தமாக இருந்தால் நடிப்பேன். சிறு வயதில் நாடகங்களில் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. புராணங்களை மையமாக கொண்டு மேடை ஏற்றப்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்கவேண்டும் என்பது ஆசை. அடுத்து கவுதம் இயக்கும் படம், சமுத்திரக்கனியின் உதவியாளர் ராடன் ராஜா இயக்கும் படத்திலும் நடிக்கிறேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்'' என்றார் மிதுன்.