நடிகர் இமான் அண்ணாச்சி தனது "இணைந்த கைககள் அறக்கட்டளை' மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதில் சினிமா, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் இணைந்து கொள்ள அவர் அழைப்பு விடுக்கிறார். இது குறித்து இமான் அண்ணாச்சி பேசும் போது... "பசிதான் இங்கே பொது மொழி. உலகின் எந்த இனமாக இருந்தாலும், பசியை வெளிக்காட்டுவதற்கு பாஷை தேவையில்லை. நானும் சென்னைக்கு சினிமா கனவில் வந்து, செய்யாத வேலை இல்லை. பசியால் சுருண்டு கிடந்த நாள்கள் அதிகம். கோயம்பேடு மார்க்கெட்டு போய் காய்கறி வாங்கி, அதை வியாபாரம் செய்து, படாத கஷ்டங்கள் பட்டு இன்று ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன். பசியை அதி தீவிரமாக உணர்ந்தவன் நான். குடல் சுருங்கித் துடித்து, ஒரு வேளை சோற்றுக்கு செத்து சுண்ணாம்பு ஆகி இருக்கிறேன். அந்த வலியை என் பணம் மூலம் தீர்த்து வைக்க நினைத்தேன். அதற்காகத்தான் "இணைந்த கைகள்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவங்கி உதவி வருகிறேன். ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை ஒரளவுக்கு நிறைவேற்றி வைப்பதே இதன் நோக்கம். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், நடிகர் துரை சுதாகர் உள்ளிட்ட பலர் இதில் இணைந்து உதவி வருகிறார்கள். "உனது பசியை நான் உணர்ந்து கொள்கிறேன்' என்ற தாய்மையின் கருணையில் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு'' என்றார் இமான் அண்ணாச்சி.