உதயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மேல் நாட்டு மருமகன்'. சின்னத்திரை பிரபலம் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். பிரான்ஸைச் சேர்ந்த ஆண்ட்ரீயன் கதாநாயகியாக நடிக்கிறார். மறைந்த வி.எஸ்.ராகவன், அஞ்சலி தேவி மற்றும் அசோகராஜ், சாத்தையா உள்ளிட்ட பலர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் எம்.எஸ்.எஸ்.. வே.கிருஷ்ணகுமாரின் இசையில், மறைந்த நா.முத்துக்குமார் மற்றும் நாஞ்சில் ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கௌதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். உலக அளவில் தமிழ் காலாசாரத் தன்மைக்கு தனிப் பெருமை உண்டு. உலகின் பல பிரபலங்களும், தமிழின் தொன்மை மிகுந்த கலாசாரம், பண்பாடு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படியான கலாசாரத்தில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு பெண்கள், தமிழ் இளைஞர்களை திருமணம் செய்து வருவது அன்றாடச் செய்திகளாக இடம் பிடித்து வருகின்றன. அப்படியாக, பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பெண், தமிழகத்துக்கு சுற்றுலா வருகிறார். வருகிற இடத்தில் தமிழ் இளைஞன் மீது காதல் கொள்கிறாள். பின் இருவரும் இணைந்தார்களா... அவர்களின் காதலுக்கு வந்த பிரச்னைகள் என்ன... என்பதை சுவாரஸ்யமாக சொல்லுவதே திரைக்கதை. டிசம்பர் மாத இறுதியில் படம் வெளியாகவுள்ளது.