எஸ்.எம்.செந்தில் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், "திரு.வி.க பூங்கா'. இதன் டீசர் வெளியீட்டு விழாவில் பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் படம் எடுப்பதாக கூறியிருந்தார். அது குறித்து மாரியப்பனிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த மாரியப்பன், "என் வாழ்க்கையைப் படமாக்குவது குறித்து பேசினார்கள். ஆனால், இப்போது எனக்கு அந்த எண்ணம் இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. மேலும், எனது நண்பர்கள் சிலர் என் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து சினிமா படமாக உருவாக்குவதாக வந்த தகவலும் தவறானது' என்றார். இயக்குநர் எஸ்.எம்.செந்தில் கூறுகையில், "இது இளைஞர்களின் தற்கொலைக்கு எதிரான படம். அதனால்தான், வாழ்க்கையில் போராடி ஜெயித்த மாரியப்பனை விழாவுக்கு வரவழைத்தோம். இதில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாடல் எழுதியுள்ளார். கலா மாஸ்டர் பாடியுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி நடித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாகிறது' என்றார்.