சொல்லா சொற்கள் ஏராளம்! 

சொல்லா சொற்கள் ஏராளம்! 

"எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும்.  மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப் பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள்.

"எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும்.  மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப் பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களைப் பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்களும், பகிரப்படாத தனிமையும் இன்னும் ஏராளமாக இருந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே..? அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது. 
குறும்படங்கள் எடுத்தால்தான் வெள்ளித்திரை வாய்ப்பு என ஒரு சூழல் உருவாகியிருந்த காலம் அது.  அந்த சூழலுக்காக "மது' என்று ஒரு குறும்படம் எடுத்தேன். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பார்த்து, பாராட்டி அதை அவரின் "பெஞ்ச் டாக்கீஸ்' படத்தில் சேர்த்து வெளியிட்டார். அதற்குக் கிடைத்த பாராட்டுகள் நிறைய.  அதன் திரைக்கதை விரிவாக்கம்தான்  "மேயாத மான்'. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பது அவரின் பெருந்தன்மை... எதிர்வரும் சினிமாக்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது'' என்கிறார் இந்தபடத்தின் இயக்குநர்  புதுமுகம் ரத்னகுமார். 

இவ்வளவு மெனக்கெடல்கள் இருக்கிற அளவுக்கு கதையில் என்ன விசேஷம்...?
சாமானியர்களின் அன்புதான் எப்போதுமே பிரதானம். நமக்கு எல்லாமே சென்னைதான். இங்கே இருக்கிற ரெட்ஹில்ஸ் நம்ம ஏரியா. இந்த மண்ணோடும், மக்களோடும் சேர்ந்து வளர்ந்த பிள்ளை நான். வளர்ச்சியும், வீழ்ச்சியும் கண் கூடாக பார்த்து வந்திருக்கிறேன். இது ராயபுரம் பகுதியில் இருக்கிற ஒரு பையனின் கதை. ஆயிரமாயிரம் வாய்ப்புகளையும், வசதிகளையும் அள்ளி இறைத்தபடி இருக்கும் இந்த சென்னையில், அதன் பூர்வக்குடிகளின் கொண்டாட்டங்கள் எங்கே இருக்கின்றன? எங்கெங்கோ இருந்து வந்தவர்கள், பக்கிங்காமை கூவமாக்கி விட்டார்கள். அந்தக் கூவத்தின் கரையில், நெருக்கியடிக்கும் குடிசைகள் போட்டு கொசுக்களோடு வாழ்கிறார்கள் இந்த நகரத்துப் பிள்ளைகள். இப்படி ஏக வருத்தங்கள் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை எப்போதுமே அழகு. அந்த அழகின் உற்சாக தருணங்கள்தான் கதை. இங்கே வளருகிற ஒவ்வொரு இளைஞனிடமும் ஒரு வித்தை இருக்கும். பாட்டு, டான்ஸ் என ஒவ்வொருவரிடமும் தனித்துவம் இருக்கும். அப்படியான ஆள்தான் நம்ம வைபவ். "மேயாத மான்' என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை நடத்தும் அவருக்கு காதல், பாட்டு, டான்ஸ், ரொமான்ஸ் என ஒரு வாழ்க்கை உண்டு. அந்த கலகலப்பும், உற்சாகமும்தான் படம்.

வைபவ்தான் இந்தப் படத்துக்கான சாய்ஸில் இருந்தாரா...?
"மது' குறும்படத்தில் நடித்தவர்கள், இப்போது பிஸி. இருந்தாலும், நான் அவர்களிடம் செல்லவில்லை. ஒரு குறும்படத்தின் கதை விரிவாக்கம் ஆகும் போது, வேறு மாதிரியாக யோசிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதுதான் அந்த இடத்துக்கு வைபவை கொண்டு வந்தோம். கதையின் கதாபாத்திரம் போலவே, கலகலப்பான ஆள். அதோடு அவருக்கென ஒரு அடையாளம் இருந்ததில்லை. அவரை கொண்டு எது சொன்னாலும் அது எடுபட்டு நிற்கும். அதற்காகவே எல்லோருக்கும் பரிச்சயமான வைபவை கொண்டு வந்தேன். வசதி, வாய்ப்புகளோடு வளர்ந்து வந்த பிள்ளை. ஆனால், எந்த பந்தாவும் இல்லாத மனிதர். கதைக்கான சூழல்களை புரிந்து கொண்டு வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தது எங்களுக்கு வசதி. அழகான கதையை, அதன் நோக்கிலே கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார்.  சினிமாவில் சில வருடங்கள் அனுபவமுள்ள நடிகர், இருந்தாலும் இதற்காக ஒரு புதுமுகம் மாதிரி ஒத்துழைப்பு கொடுத்தார். படத்துக்கு உரிய வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், அதன் ஒரு பகுதி வைபவ்க்கும் போய் சேரும். வைபவை  எல்லோரும் அறிந்துணரும் இடம் இந்த படத்தில் அழகாக கை சேர்ந்திருக்கிறது. 

டி.வி. பிரபலம் பிரியா பவானி சங்கரை ஹீரோயினாக கொண்டு வந்துட்டீங்க...?
நான் கதைச் சொல்லி நடிக்க கேட்டதும், பிரியாவுக்கு ஒரு தெளிவு இருந்தது. ஆனால் நடிக்க தயக்கம் காட்டினார். உங்களைத்தான் நிறையப் பேர் சிபாரிசு செய்தார்கள் என்றதும், அந்த நம்பிக்கைக்காக நடிக்க தயாராகி வந்தார். நல்லதொரு இடம் பிரியா பவானி சங்கருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. ஆனால், தொடர்ந்து நடிப்பது பற்றி அவர்தான் பேச வேண்டும். இதே அர்ப்பணிப்பும், ஆர்வமும் இருந்தால், அந்த பெண்ணுக்கு ஒரு நிலையான இடம் இருக்கிறது. ஒரு டி.வி.பிரபலம் என்பதற்காக உடனே நடித்துவிடவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் முன்னால் ஒத்திகை பார்த்து நடித்தார். அந்த அருமையான ஒத்துழைப்பும் இந்த படம் நினைத்த மாதிரி வளர்ந்து வர, முக்கிய காரணம். 

சந்தோஷ் நாராயணன் இசையில், மெட்ராஸ் பின்னணி... பாடல்கள் எப்படி வந்திருக்கின்றன...?
அதற்கு "மெட்ராஸ்' என்று ஒரு படமே உதாரணமாக நிற்கிறது. அப்படி ஒரு பின்னணிதான் இது. அதுவும் பாடல், மேடை, கச்சேரி என்று இருக்கிற பின்னணி. அதனால் பாடல்கள் பற்றி சொல்லவே வேண்டாம். ஏழு பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பிரதீப்குமார் என்று இன்னொரு புதுமுகம்.  இசையில் சந்தோஷ் நாராயணனோடு பயணம் செய்து வந்தவர். இந்தப் படத்தில் இரண்டு பேருமே இசையமைப்பாளர்கள். சந்தோஷுக்கு ஐந்து பாடல்கள் என்றால், பிரதீப்புக்கு இரண்டு பாடல்கள். குதூகலமும் சந்தோஷமும், கொண்டாட்டமுமாக இருக்கும். அதே மாதிரி பாடல் வரிகளும் கவனித்தக்க இடத்தில் இருக்கும். விவேக் எழுதியுள்ள "தங்கை சென்டிமென்ட்' பாடல், பெரிய ஹிட்டாகி ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு படம்.. எந்தளவுக்கு சுதந்திரம்...?
அவரை நான் ஒரு தயாரிப்பாளராக பார்க்கவில்லை. நல்ல கதையை, அடையாளம் காட்ட த் தெரிந்த சக படைப்பாளியாகப் பார்க்கிறேன். அவர் நினைத்திருந்தால், வேறு ஓர் இயக்குநருக்கு இந்த வாய்ப்பைத் தந்திருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி என் கதையை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இதைத் தயாரிக்க வந்தார். இந்தக் கதையைப் போலவே, ஆழமான எளிமையான அன்பு அது. கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. 
-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com