மயிலாப்பூரில் உள்ள சிவன் கோயில்களில் ஒன்று வீரபத்ர சுவாமி கோயில். சிவ புராணங்களின்படி, சிவனின் ஜடா முடியிலிருந்து தோன்றியவர் வீரபத்ரர் என்பது ஐதீகம்.
வீரபத்ரரின் மனைவி தாட்சாயினி, அவளின் தந்தை நடத்திய யக்ஞ யாகத்தில் புனிதத் தீயில் தன்னைத் தானே பலியிட்டு உயிர்த்தியாகம் செய்தாள். இதனால் கோபமடைந்த வீரபத்ரர், தட்சனையும் அந்த யாகத்தில் ஈடுபட்ட அனைவரையும் அழித்தார். அதன்பின், பிரம்மன், ஓர் ஆட்டின் தலையை தட்சனின் உடலோடு பொருத்தி அவனுக்கு உயிர் கொடுத்தார். அதன் காரணமாக, தட்சன் மனித உருவுடனும், ஆட்டின் தலையுடனும் இங்கு காட்சியளிக்கிறார்.
முக்கிய கருவறையில் வீர பத்ர சுவாமியாக சிவன் கையில் வில், அம்பு, கத்தி, வாளுடன் நின்ற கோலத்தில் அருள் புரிகிறார்.
முன்புற மண்டபத்தில், வீர பத்ரரை நோக்கிய வண்ணம் நந்தியும், அருகே கொடிமரமும் உள்ளன. மேலும், அந்த மண்டபத்தில் விநாயகர், முருகன், வள்ளி-தெய்வானை, சிவன், பெருமாள் சந்நிதிகளும் உள்ளன. இவற்றில், சிவன்-பெருமாள் சந்நிதிகள் எதிர் எதிரே அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். வீர பத்ரர் ஏந்தியிருக்கும் ஆயுதங்கள் போன்றே அவர் மனைவி அபயாம்பாளும் நான்கு கரங்களில் ஆயுதங்கள் ஏந்திக் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இக்கோயிலில், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், துர்க்கை, கால பைரவர், தட்சிணா மூர்த்தி ஆகியோருடன் நவக்கிரகங்களும் அருள்புரிகின்றனர். தட்சிணா மூர்த்தியின் தலைமுடி பொதுவாக விரிந்த கோலத்தில் காணப்படும். ஆனால், இங்கு வித்தியாசமாக முடிபோட்ட நிலையில் காணப்படுகிறது.
வன்னி மரம் இக்கோயிலின் தல விருட்சமாகவும், புனித மரமாகவும் திகழ்கிறது. சிவனுக்கு உகந்த வில்வ மரமும் இங்கு உள்ளது. வில்வ மரத்தின் அடியில் பிள்ளையார் வில்வ விநாயகராகவும், பார்வதிதேவி வில்வ நாயகியாகவும், சிவபெருமான் வில்வ நாதராகவும் அருள்புரிகின்றனர்.
வீர பத்ர சுவாமி கோயில், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் - மாதவ பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ளது. இங்கு வீர பத்ர சுவாமிக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் பத்துநாள்கள் திருவிழா நடைபெறுகிறது. அதுவும் கபாலீஸ்வரர் கோயிலில் திருவிழா நடைபெறும் அதே பத்து நாள்களில்தான் இங்கும் திருவிழா கொண்டாடப்படுகிறது.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் , கோயில் - சிற்பங்கள் ஆராய்ச்சியாளர்.
தமிழில்: ரவி