எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வாண்டு'. மஹா காந்தி, ரமா, சாய் தீனா, புவனேஸ்வரி, சீனு, ஆல்வின், ஷிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநரிடம் பேசுகையில், ""வட சென்னைதான் களம். 1970-களில் வட சென்னையில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றின் தழுவலாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பிந்தைய காலக் கட்டம் வரையில் வட சென்னைப் பகுதிகளில் பாக்ஸிங் விளையாட்டு பிரபலமாக இருந்தது. அதை முன் வைத்து நடக்கும் சம்பவங்களால் எப்போதும் அந்தப் பகுதி பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும். அப்படியான ஒரு உண்மை சம்பவம்தான் இந்தக் கதை. இரு தரப்புக்கிடையேயான விரோதம், பகை, வெற்றிப் பெற வேண்டிய உணர்வு எல்லாவற்றையும் முன் வைப்பதே திரைக்கதை. இதற்காக அந்தப் பகுதிகளில் தற்போது வாழ்ந்து வரும் பாக்ஸிங் வீரர்களை சந்தித்து, அந்த சம்பவத்தின் நிகழ்வுகளை அறிந்து படமாக்கி இருக்கிறேன். நடிகர்களுக்கு பிரத்யேக பயிற்சியளித்து அவர்களை பாக்ஸிங் வீரர்களாக மாற்றி படப்பிடிப்பை முடித்துள்ளேன். கிளைமாக்ஸ் காட்சியில் எடுக்கப்பட்டுள்ள பாக்ஸிங் காட்சிகள், தமிழ் சினிமாவுக்கே புதுமையானதாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பர் மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது'' என்றார் வாசன் ஷாஜி. 100% காதல் படப்பிடிப்பு தொடங்கியது