"அவள் அப்படித்தான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. அதன் பின் வெளிவந்த "ராஜபார்வை' படத்தில் கமல்ஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து ரசிகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த சித்ரா, மோகன்லால் ஜோடியாக "ஆட்ட கலசம்' படத்தின் மூலம் கதாநாயகியாக உருவெடுத்தார். அதன் பின் ரஜினியின் "ஊர்க்காவலன்', "சேரன் பாண்டியன்', "மதுமதி', "பொண்டாட்டி ராஜ்யம்' உட்பட 300 படங்கள் மற்றும் "இதயம்' நல்லெண்ணெய் விளம்பரங்களில் நடித்த சித்ரா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்படங்களில் படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பின் நடிக்காமல் இருந்த சித்ரா, இப்போது மீண்டும் திரை பிரவேசத்துக்கு வருகிறார்.
இது குறித்து அவரிடம் பேசும் போது... "திருமணத்துக்குப் பின் குடும்பம், பிள்ளைகள் வளர்ப்பு என வேறு உலகத்தில் இருந்தேன். இதனால் சினிமாவுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் வந்துள்ளது. சினிமாவிலிருந்து விலகி சுமார் 20 ஆண்டுகள் ஆகி விட்டன. நான் இருந்த சினிமாவுக்கும், தற்போதைய சினிமாவுக்கும் நிறைய மாற்றங்கள். ஆனால், எல்லா சினிமாக்களையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். என் தோற்றத்துக்கும், வயதுக்கு ஏற்ற எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க காத்திருக்கிறேன்'' என்றார் சித்ரா.