விஜய் சாரை அவ்வளவு பிடிக்கும்!

பளீச் அறிமுகத்துக்கு காத்திருக்கிறார் நந்தன். "பள்ளிப் பருவத்திலே' படத்தின் டிரெய்லர் தொடங்கி பாடல்கள் வரை அள்ளுகிறது அவ்வளவு அழகு. யார் இந்தப் பையன்? என
விஜய் சாரை அவ்வளவு பிடிக்கும்!

பளீச் அறிமுகத்துக்கு காத்திருக்கிறார் நந்தன். "பள்ளிப் பருவத்திலே' படத்தின் டிரெய்லர் தொடங்கி பாடல்கள் வரை அள்ளுகிறது அவ்வளவு அழகு. யார் இந்தப் பையன்? என விசாரிக்கும் அளவுக்கு நம்பிக்கை தரும் இவர், இசையமைப்பாளர் சிற்பியின் மகன். சினிமா பந்தா இல்லாமல் மெல்லிய குரலில் பேசி, ஜில்லென புது லுக் காட்டி அமர்கிறார். கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி உட்காருகிற துறுதுறு நந்தனிடம்...

பிரபலத்தின் வாரிசு... பெரிய சினிமா பின்னணி... இதுவெல்லாம்தான் நடிப்பதற்கான தகுதிகள் என்ற நிலை இப்போது இல்லை...?
தமிழில் இதுபோன்ற படம் கிடைப்பது பெரிய அதிர்ஷ்டம். எனக்கும், இந்தப் படத்தின் ஹீரோயின் வெண்பாவுக்கும் அது நிச்சயமாக இருக்கிறது.  டிரெய்லர் வெளியான நாளிலிருந்து இவ்வளவு எதிர்பார்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றியது. அப்பாவைத் தேடி சினிமா பிரபலங்கள் நிறைய பேர் வீட்டுக்கு வருவார்கள். அப்படி வரும் ஒவ்வொருத்தரும் தம்பி நல்லா இருக்கானே... சினிமாவுல ஹீரோவாக்கி விடுங்களேன்... என்று உசுப்பேற்றி விட்டு போவார்கள். இப்படித்தான் சினிமா ஆசை கிளர்ந்து வந்தது. முதலில் படித்து டிகிரி வாங்கி விட்டுத்தான்  மறு வேலை என்று அவர் கண்டிப்பாக இருந்தார். அதனால் அவரிடம்  இந்த ஆர்வத்தை காட்டிக்கவே மாட்டேன். அப்பா ஆசைக்கு டிகிரி வாங்கி விட்டேன். நடிப்பு, கேமரா, டைரக்ஷன் எல்லாம் அடங்கிய படிப்பு இது. இயக்குர் வாசுதேவ் பாஸ்கர் சாரை போய் பார்த்ததுதான் என் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை. ஒரு கதை இருக்கு.. ஆனால் வழக்கமான கதை கிடையாது... சில விஷயங்களை சரியாக செய்தால் இது வேறு லெவலில் இருக்கும்... என அழைத்தார்.  எதற்கும் தயார் என்று அவருடன் சேர்ந்து பயணமானேன். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேலான உழைப்பு. அப்படி ஒரு கஷ்டம். இதில் எந்த மிகையும் இல்லை.  என்னுடைய எல்லா வெற்றிகளுக்கும் முதல் பிள்ளையார் சுழி போட்டவர் அவர்தான். மறக்கவே மாட்டேன்.   நீங்களெல்லாம் நின்று பேசுகிற அளவுக்கு வந்ததே பெரிய விஷயம். எளிமையும், உழைப்புதான் எல்லாவற்றையும் விட அழகு. பிரபலத்தின் வாரிசு என்பதற்கான சூழல் இப்போது இல்லை என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

முதல் படத்திலேயே எல்லோரின் கவனத்தையும் பெற வேண்டிய கட்டாயம் இப்போது உருவாகி இருக்கிறது...?
 படம் பார்த்த பின்னர், இது பற்றி பேசினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். இப்போது அப்படியில்லை. எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறுதான் பேச முடியும்.  படிப்பு, வெளிநாட்டு வேலை எனபதும் என் திட்டங்களில் ஒன்றாக இருந்தது.  நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது போன்று, சினிமாவே அமைந்து விட்டது.    என்னிடம் எப்போதும் மெனக்கெடல்கள் உண்டு. எதை தொட்டாலும் ஜெயித்து விட வேண்டும் என்ற வேட்கை இருக்கும். கல்லூரியில் படிக்கும் போதே, சினிமாவுக்காக என்னை தயார்படுத்திக் கொண்டே வந்தேன். நடிகை கலைராணி நடத்தி வரும் கூத்துப் பட்டறையில் நடிப்புக்கான இன்னப் பிற அம்சங்கள் கற்று வந்திருக்கிறேன்.  அது எல்லாவற்றிலும் பங்கு கொண்டு வந்திருக்கிறேன். அதனால்தான் அந்த கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் ஒரு நேர்த்தியை உணர முடிந்தது. முக்கியமாக சினிமாவை புரிந்து கொண்டதும் இதற்கு ஒரு காரணம். ஒரு செயல் ஒரு மனிதனை அழகாக்கணும். அதை எனக்கு செய்து கொடுத்திருக்கிறது இந்த முதல் சினிமா. எல்லோருக்கும் நன்றி.

அடுத்தடுத்த சினிமாக்களை எப்படி தீர்மானிக்க போகிறீர்கள்...?
நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. கலைஞனின் கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகர்களின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவேறும்.  ஹீரோ, ஹீரோயின் என்பதைத் தாண்டி, கதை இருந்தால்தான் அந்த படத்துக்கு வெற்றி கைக்கூடும். இந்த மாற்றம்தான் சினிமாவுக்கு முக்கியமானது. பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். எனக்கும் அப்படித்தான். கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும். 

உங்களுக்கு பிடித்த இயக்குநர், ஹீரோ யார்...?
மணிரத்னம் சார். ரொம்பவே பிடித்த இயக்குநர். வாழ்க்கையை அதன் பக்குவத்தில் புரிந்து கொண்டு, அதையே கதையாக்கி வசனங்கள் மூலமாக கலையாக்குகிற வித்தைக்காரர். கதைக்கு வசனம் எழுதாமல், எழுதுகிற வசனத்தில் வாழ்க்கையை சொல்லி விடுவார். இந்த மேஜிக் எனக்கு சின்ன வயதில் இருந்து பிடிக்கும். இப்போது சினிமாவுக்கு வந்து விட்டேன். அவர் இயக்கத்தில் ஒரு படமாவது, நடித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். விஜய் சாரை அவ்வளவு பிடிக்கும். அவர் எதிர்கொள்ளாத விமர்சனங்கள் இல்லை. பேர், புகழ் என இப்போது சினிமா தருகிற வெளிச்சத்துக்கு அந்தப் பக்கம், யாராலும் எதிர்கொள்ள முடியாத ஒரு பக்கம் அவருக்கு உண்டு. சினிமா உலகத்தில் விதவிதமான குணாதிசயங்கள் நிறைந்த மனிதர்கள் வந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கலைஞர்கள் மத்தியில் விநோதமான, விசித்திரமான வாழ்க்கையை கடந்து வந்து ஜெயித்தவர் விஜய் சார். என்னை மாதிரி வளர்ந்து வருகிற ஒவ்வொருத்தருக்கும் விஜய் சாரின் வாழ்க்கை பெரிய உதாரணம். அவரின் பொறுமையும், எளிமையும் எப்போதுமே அழகு. அவர் எப்போதைக்குமான ரோல் மாடல்.  சில நேரங்களில் நமக்கு பக்கத்தில் இருப்பவர்களும் ரோல் மாடல்களாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொருவரையும் கவனித்து வழி நடக்க நினைக்கிறேன். 
-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com