நீண்ட காலமாக உடல் நலமின்றி ஃபிடல் காஸ்ட்ரோ வெளியுலகத் தொடர்பின்றி இருந்தபோது அவர் உடல்நிலையைப் பற்றி பலவிதமான வதந்திகள் பரவின. அந்த நேரத்தில் அவருக்கு இந்தியாவில் மருத்துவக் குணம் கொண்ட மூலிகையாகக் கருதப்படும் முருங்கை இலை மற்றும் முருங்கைக்காய் பற்றி அவரிடம் சொல்லப்பட்டது. இதைக் கேட்டதும் காஸ்ட்ரோ தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து முருங்கை விதைகளை வரவழைத்து ஹவானாவில் தான் வசித்து வந்த வீட்டு காம்பவுண்டு எல்லைக்குள் பயிரிடக் கூறினாராம்.
ஏற்கெனவே காஸ்ட்ரோவின் மனதில் புரட்சிக்கு வித்திட்ட சேகுவாரா, 1960-ஆம் ஆண்டு பிரேசிலிருந்து முருங்கை விதைகளைக் கொண்டு வந்து கியூபாவில் சிறிய அளவில் பயிரிட்டிருந்தார். காஸ்ட்ரோ முருங்கை வளர்ப்பில் ஆர்வம் காட்டியதால் நான்காண்டுகளில் ஏராளமான முருங்கை மரங்கள் வளர்ந்தன. இதற்கிடையில் முருங்கை இலையை உணவாகப் பயன்படுத்தியதால் காஸ்ட்ரோவுக்கு இருந்த நோயின் கடுமை குறைந்து குணமடையத் தொடங்கினார்.
இதுகுறித்து 2012-ஆம் ஆண்டு கியூபாவின் அதிகாரப்பூர்வமான "பிரன்சா லத்தினா' என்ற தகவல் இணையதளத்தில் முருங்கைக்காய் பற்றி பாராட்டியிருந்தார். இதைக் கண்ட வாசகர் ஒருவர் விளக்கம் கேட்டபோது, ""இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட முருங்கையில் ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடிய அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த முருங்கை இலையை உணவாக அவரவர் வயிற்று செரிமானப்படி 30 கிராம் அளவு மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சிலர் இதைக் கொதிக்க வைத்து தேநீராகவும் அருந்துவதாக அறிந்தேன். மருத்துவக் குணம் கொண்ட முருங்கை மரங்களைப் பாதுகாப்பாக வளர்ப்பது எப்படி என்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைப்பது அவசியம்'' என்று குறிப்பிட்டாராம்.
கியூபா முழுவதும் முருங்கை மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டிய காஸ்ட்ரோ, நீண்ட இடைவெளிக்குப் பின், 2015-ஆம் ஆண்டு மக்கள் முன் தோன்றியபோதுகூட முருங்கைக்காய் பற்றியும், அதன் மருத்துவக் குணத்தைப் பற்றியும் விளக்கிப் பேசினாராம்.
ஐந்தாண்டுகளுக்கு முன் கியூபாவில் பிரபலமாக உள்ள "பயோடெக்னாலஜி இன்ஸ்டிடியூட்' முருங்கை பற்றி ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் முருங்கைக்கு புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.