சிம்புவுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்குப் பின் இயக்குநர் பிரபுதேவாவை காதலித்து வந்தார் நயன்தாரா. இருவருக்குமான கருத்து வேறுபாடு காரணமாக அந்த காதலும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து "நானும் ரௌடிதான்' படத்தில் நடித்த போது, அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் விக்னேஷ் சிவனை அழைத்து கொண்டு வெளிநாடுகளில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் கடந்த வாரம் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வந்தது. இதையடுத்து காதலருக்கு வித்தியாசமான பரிசு அளிக்க நயன்தாரா விரும்பினார். அதன்படி திடீரென விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு அவர் அமெரிக்கா பறந்தார். நியூயார்க்கில் நயன்தாராவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விக்னேஷ் சிவன். இருவரும் சேர்ந்து புரூக்ளின் பாலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த படம் நேற்று இணையதளத்தில் வெளியாகி பகிரப்பட்டது. அமெரிக்காவில் மேலும் 3 நாள்கள் தங்கி விட்டு அவர்கள் சென்னை திரும்பினர். கடந்த பல மாதங்களாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு ரகசிய திருமணம் முடிந்ததையடுத்து, அமெரிக்கா சென்று திரும்பியிருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.