அன்புக்கும் பொருளாதாரத்துக்குமான உரசல் 

"எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை
அன்புக்கும் பொருளாதாரத்துக்குமான உரசல் 

"எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அதுதான் உலகத் தரம்.'' சினிமாக்களின் அடிப்படையை அளந்து பேசுகிறார் இயக்குநர் தாமிரா. ஷங்கர் தயாரிப்பில் பாலசந்தர் - பாரதிராஜாவை "ரெட்டச்சுழி' படத்தில் நடிக்க வைத்தவர்.
 இப்போது "ஆண் தேவதை' படத்தின் மூலம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு வருகிறார்.
 தலைப்பின் வழியா எதுவும் சொல்ல வருகிறீர்களா...?
 தேவதை என்றாலே ஆண்தான். கிரேக்க வழிபாடுகளில் தேவதைகள் என்பவர்கள் ஆண்கள். நாம் நம் வசதிகளுக்காக பெண்களை தேவதைகள் என்று அர்த்தப்படுத்தி விட்டோம். தேவதை என்பதன் பொருள் உயர்குணம். அந்த தேவதை தன்மை ஆணுக்கும் உண்டு. கொண்டாட்டமான அன்பை எவன் செலுத்துகிறானோ.. பெண்களை எவன் போற்றி பாதுகாக்கிறானோ... அவனே "ஆண் தேவதை'. கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான் இப்படியொரு தலைப்பு. தமிழக குடும்பங்களை பொறுத்தவரை சம்பாதிக்கிறவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதுபோன்று கடன் இல்லாத மனிதனே கிடையாது. வசதி, வாய்ப்புகளுக்காக மொத்த உழைப்பையும் கடனாக வாங்கி விட்டு வாழ்நாள் முழுவதும் கட்டிக் கொண்டே இருக்கிறான். அன்புக்கும், பொருளாதாரத்துக்கும் இடையில் ஒரு உரசல் இருந்தே தீரும். அந்த உரசல்தான் கதை.
 சந்தோஷத்தை எதிர்கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனுஷனுக்கு அவ்வளவு பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்றோம். அது அந்த நேரத்தில் அழகா இருக்கும். கிரீடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக நிற்கும். ஒரு கட்டத்தில் ஏசுநாதர் தலையில் இருந்த முள் கிரீடம் போன்று குத்தும். அதனால்தான் உண்மையை கண்டு ஓடி ஒளிகிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்கு தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க... பலர் சாமியாராக திரிகிறார்கள். சிலர் பைத்தியமாகிறார்கள். என்னை கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உயிரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம் இங்கே சிலருக்கு கைக் கூடி வருகிறது. இதை அந்தந்த கோணங்களின் வழியே கடத்தியிருக்கிறேன்.
 உள்ளடக்கம் பற்றி பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்கும்...?
 பிரசவம் பார்க்க நாட்டிலிலேயே அதிக வசதி இருக்கிற மருத்துவமனையில் சேர்க்கலாம். ஆனால், தாய் அனுபவிக்கிற அந்த வலிக்கு என்ன பணம் தர முடியும். இருப்பதிலேயே சிறந்த உணவை வாங்கி விடலாம். ஆனால், பசி என்ன விலை கொடுத்தால் வரும். எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது. இதோ மீத்தேன், ஹைட்ரோ ஹார்பன் எடுப்பதற்காக, எத்தனை தமிழ் கிராமங்களின் தூக்கத்தை தொலைத்திருக்கிறோம். பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும். தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்கு பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்று பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும் போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள்.
 வேறு என்னென்ன அம்சங்கள் வெளிப்படும்...?
 வேலை, பணம், தேவைகள் என ஓடும்போது குழந்தைகள் வளர்ப்பை மறந்து விடுகிறோம். கதை சொல்லி வளர்க்கிற தாத்தா, பாட்டிகள் இன்றைக்கு இல்லை. டி.வி., லேப்டாப், மொபைல்தான் இன்றைய குழந்தைகளின் உலகமாக இருக்கிறது. இன்னொரு விஷயம் கடன். வாழ்வதற்காக வேலை செய்கிறோமா... இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா.... இதுதான் இந்தப் படத்தின் லைன். வாழ்க்கையை துரத்திக் கொண்டே இருக்கிறோம். ஒரு நிமிடம் நின்று நிதானித்து பார்த்தால், எதன் பொருட்டு துரத்துகிறோம் என்றே தெரியவில்லை. இந்த ஊர், உலகமே ஓடிக் கொண்டிருக்கும் போது, நாமும் ஓட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறோம். அப்படி ஓடுகிற ஒரு தனிமனிதன் எதை இழக்கிறான். அவனின் வலி என்ன என்பதுதான் இந்த கதை. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், கவின் பூபதி, மோனிஷா, இளவரசு, சுஜா வாரூணி இப்படி சில கதாபாத்திரங்களை வைத்து கதையை உலவ விடப் போகிறேன்.
 நல்ல அறிமுகப் படம் கிடைத்தும், பெரிய இடம் இல்லாதது அழுத்தமாக இல்லையா...?
 எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம் என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஏற்கெனவே தீர்மானித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும், மனசுக்கு பிடித்ததை செய்தே தீருவேன். சமீபமாக நான் திருநெல்வேலி பக்கம் விவசாயம், மாடு வளர்ப்பு போய் விட்டேன். ஏதேச்சையான சந்திப்பில் சமுத்திரக்கனிக்கு ஒரு கதை சொன்னேன். பிடித்திருப்பதாக சொன்னார். சினிமாவுக்கு வந்து விட்டேன். இதுதான் என் பயணம். அருவா, ஆபாசம் என நாடு போற்றும் வெள்ளி விழா படங்களை எடுத்தால், சமூகத்தை கெடுக்கிறீங்களே என்று கேட்கலாம். சமூகத்தின் தற்போதைய தேவை உணர்ந்து நான் எடுத்து வைக்கிற ஒரு கதை இது. இதை நானே தயாரிக்கலாம் என தோன்றியதால் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறேன். அவ்வளவுதான். அனுபவங்கள் மூலமாகவே நான் எதையும் புரிந்துக் கொள்ள விரும்புகிறேன். உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் ரசிக்கவும்தானே வாழ்க்கை. என் வாழ்க்கையை நானே வாழ்ந்து பார்க்கும் தருணம் இது.
 -ஜி. அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com