ஸ்ரீ துர்கா இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "சென்னை மாநகரம்'. கஸ்தூரிராஜா, மஜித் உள்ளிட்ட இயக்குநர்களிடம் பல படங்களில் பணியாற்றிய எஸ்.ஆர். ஜம்புலிங்கம் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். படத்துக்கான நடிகர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில் ஜம்புலிங்கம் பேசும் போது:
"இன்றைய சென்னை பெருநகர சூழல் என்பது முழுக்க முழுக்க பணமயமாகி விட்டது. வாடகை, குடி தண்ணீர், அன்றாடத் தேவைகள் என இங்கு ஒரு சாமானியன் வாழ்வதே சாதனையாகி விட்டது. ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு சென்னை வந்த கணக்கை வைத்துக் கொண்டு இப்போது சென்னைக்கு சுமார் 380 வயது என்கிறார்கள். சென்னையின் பழைய புகைப்படங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமும் பரவசமுமாக இருக்கிறது. அண்ணா சாலை முழுக்க மரங்கள் இருந்திருக்கின்றன. நான் சென்னை வந்த போது இருந்த மரங்கள் இப்போது இல்லை. ஆளும் பேருமாக சேர்ந்து இந்த நகரத்தை நிர்வாணமாக்கி கொண்டே இருக்கிறோம். இந்த நகரத்தை அதன் ஆதி மனிதர்களிடமிருந்து பிடுங்கி, அதன் அத்தனை அடையாளங்களையும் அழித்து கொண்டு இருக்கிறோம். இப்படியான தற்காலச் சூழலில் சென்னையில் பின்னணியில் இந்த பெருநகரத்தின் அரசியல், அதிகாரம் வறுமை, ஜொலிக்கும் நட்சத்திர விடுதிகள் என ஏற்றத்தாழ்வுகளை சொல்லுவதே கதை. கணேஷ் ராம் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. மே மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.'' என்றார்.