"துள்ளுவதோ இளமை', "காதல் கொண்டேன்', "யாரடி நீ மோகினி', "திருவிளையாடல் ஆரம்பம்', "3' உள்ளிட்ட படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "பாண்டி முனி'. ஆசிப், மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜாக்கி ஷெராப், ஷாயாஜி ஷிண்டே இருவரும் கதையின் பிரதான கதாபாத்திரங்கலில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் கஸ்தூரி ராஜா. இதுகுறித்து கஸ்தூரிராஜா பேசும்போது... ""ஹாரர் பாணி படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்றபோது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப் பகுதி மக்கள் தங்களது இஷ்டக் கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 700 வருஷமாகிறது என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் ஆயிரம் வருஷமாகிறது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக்கோயில் மாதிரியான இடம். அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். அங்கே வந்த ஊர் மக்கள், "இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது' என்றனர். அந்த கோயிலுக்கு அருகில் படப்பிடிப்பை நடத்தி வந்தோம். நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடத்தை சுற்றிலும் குறிஞ்சி பூ கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இனைய உள்ளார்'' என்றார் கஸ்தூரிராஜா.