படம் வெளிவருவதற்கு முன்பே, அந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் சினிமா வட்டாரங்களில் எழுவதுண்டு. அந்த வகையில் இடம் பிடிக்கிறது "தொரட்டி'. ஷமன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஷமன் மித்ரு இப்படத்தை தயாரிப்பதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். கதாநாயகியாக சத்யகலா நடிக்கிறார். ஜானகி, ஸ்டெல்லா, குணமன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மாரிமுத்து எழுதி இயக்குகிறார். கிடை போட்டு வாழும் சமூகத்துக்கு முக்கிய ஆதாரமே தொரட்டிதான். பெரிய கம்பின் முனையில் சிறு அரிவாள் கட்டி வைத்திருப்பார்கள். ஆடுகளை மேய்க்கும்போது, அதற்கான இலை, தழைகள், கருவக்காய் என குலைகளை இழுத்து போட்டு அதற்கு உணவளிப்பதுதான் தொரட்டியின் வேலை. விவசாயத் தொழில்களில் முதன்மையான இடம் இந்த கிடைத் தொழிலுக்கு உண்டு. செயற்கை உரங்கள் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில், கிடை போட்டுத்தான் நிலங்களுக்கு உரம் பிடிக்க வேண்டும். இப்போது எல்லாவற்றிலுமே செயற்கை. கிடை போடும் கூட்டத்தினர் ராமநாதபுரம் தொடங்கி நாகை வரை கால்நடையாகவே ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்து, கிராமங்களில் தங்கி அந்த ஊர் நிலங்களில் கிடை போட்டு வருமானம் ஈட்டுவார்கள். இந்த களத்தில் அவர்களின் வாழ்வியலைச் சொல்லுவதுதான் கதை. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தமிழகம் முழுவதும் சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார்.