குருத்தோலையில் தாஜ்மஹால் உள்பட பல்வேறு வடிவங்களிலான பொருள்களை பனைத் தொழிலாளி ஒருவர் மிகச் சிறப்பாக செய்து கண்காட்சிக்கு வைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைத் சேர்ந்தவர் பால்பாண்டி(65). கருங்குளம் பகுதியில் பனை ஏறுவதும், மற்ற நேரங்களில் விவசாயமும் செய்து வருவதுடன். பனை ஓலையிலும் பல விதமான பொருள்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர். பனை நாரில் கட்டில் முடைவது, பனை ஓலையில் பாய் முடைவது, நார் பெட்டி செய்வது உள்பட பல பொருள்களை செய்வது இவருக்கு கைவரப் பெற்றவை.
கண்காட்சியில் வைக்கும் அளவுக்கு ஓலையில் பலவிதமான பொருள்களை செய்ய ஆசைப்பட்டார். இதன் பயனாக தாஜ்மஹால், விமானம், கிறிஸ்தவ ஆலயம், ஆலய கோபுரம், வில் வண்டி, யானை, நார் பெட்டி, கல்லா பெட்டி, மிளகு பெட்டி, கிலுக்கு உள்பட பல பொருள்களை செய்தார். பின் அதற்கு வர்ணம் தீட்டினார். இந்தப் பொருள்கள் பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.
பழைய காலங்களில் நார் பெட்டியில் வர்ணம் பூச சாயம் உருவாக்குவார்கள். ஆனால் தற்போது அந்த வசதி குறைந்துள்ள காரணத்தினால் பெயிண்ட் அடித்து வீட்டில் கண்காட்சியாக வைத்துள்ளார்.
தாஜ்மஹால் வடிவம் செய்வதற்கு இவர் பல ஸ்தூபிகளை அமைத்து அதன் மேலே ஓலையைக் கொண்டு பல வேலைப்பாடுகளுடன் சுமார் 3 அடி உயரத்தில் செய்துள்ளார். பளிங்கு மாளிகை என்பதைக் குறிக்கும் வண்ணத்தில் இதற்கு வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பால்பாண்டி கூறியதாவது:
""தற்போது பனைத் தொழில் நசிவடைந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பனையில் இருந்து கிடைக்கும் பொருள்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் போலி பெருகிக் கொண்டிருக்கிறது. பனை ஏறும் தொழிலாளர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் பனையின் பயன்பாடுகள் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் கல்வி நிலையங்கள் உள்பட பல இடங்களுக்கு இந்தப் பொருள்களை கொண்டு சென்று கண்காட்சியாக வைக்க முடிவு செய்துள்ளேன்'' என்றார்.