பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது "மிக மிக அவசரம்'. பெண் காவலர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக இக்கதை உருவாகி வருகிறது. பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இப்படத்தை பார்த்து விட்டு, ஆதரவு குரல் எழுப்பியிருக்கிறார்கள். இந்தப் படம் சொல்லும் கருத்தோடு, மேலும் ஒரு நிஜம் நடமாடி வருகிறது.
பெண் ஆய்வாளர் ஒருவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவெடுத்து அதை கட்செவி அஞ்சலில் பதிவிட, அவசரம் அவசரமாக தலையிட்டு அப்பெண் ஆய்வாளரை காப்பாற்றியிருக்கிறது காவல் துறை. அது மட்டுமல்லாமல், மேற்படி அதிகாரிக்கு இப்போது கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. படம் குறித்து இயக்குநர் சுரேஷ் காமாட்சி பேசும் போது... ""காலை முதல் மாலை வரை உச்சி வெயிலில் கால் கடுக்க நிற்கும் பெண் காவலர்களை பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் உறுத்தும். வலிகளும், கஷ்டங்களும் நிறைந்திருக்கும் அவர்களின் வாழ்க்கைக் கதை. அவர்களை பின்தொடர்ந்து, அத்தனையையும் கொஞ்சமும் சிதறிவிடாமல் சேகரித்தேன். குறிப்புகளில் கவனம் செலுத்தினேன். அதே நேரத்தில் "கமர்ஷியல்' தன்மையுடன் வந்திருக்கிறது படம். படத்தைப் பார்த்தவர்கள் மன நிறைவோடு வாழ்த்தினார்கள். இன்று மன நிறைவோடு உங்களின் மன ஓட்டத்தை திரையரங்குகளில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்றார் சுரேஷ் காமாட்சி.