தமிழில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை தனித்தனியே படமாகி வருகிறது. தெலுங்கில் மறைந்த முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது. அடுத்து "ஆந்திர சிவாஜி' எனப் பாராட்டப்பட்ட நாகேஸ்வரராவின் வாழ்க்கை படமாகி வருகிறது. நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தில் "பாகுபலி' வில்லன் ராணாவை நடிக்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை வம்சி கிருஷ்ணா இயக்கவுள்ளார். இதற்கிடையில் ஆந்திர மாஜி முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதையும் தயாராகிறது. இதில் ராஜசேகர ரெட்டியாக நடிக்க மம்முட்டியிடம் பேச்சு நடக்கிறது. மறைந்த நடிகர்களின் வாழ்க்கை படமாகும் நிலையில், ஹிந்தியில் தற்போதும் படங்களில் நடித்து வரும் சஞ்சய் தத் வாழ்க்கை திரைப்படமாகிறது. சஞ்சய் தத் வேடத்தில் நடிகர் ரன்பிர் கபூர் நடிக்கிறார். ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. வரும் மார்ச் மாதத்தில் திரையிடப்படுகிறது. இதற்கிடையில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தெலுங்கு மற்றும் தமிழில் படமாகிறது. இதில் சாவித்திரியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.