கமல்ஹாசன் நடித்திருக்கும் "விஸ்வரூபம் 2' முற்றிலும் முடிந்து தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெறப்பட்டதுடன் திரைக்கு வர தயாராக உள்ளது. "காலா' படத்துக்கு முன்பே இப்படம் தணிக்கை சான்றிதழ் பெற்றதால் அதற்கு முன்பே ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் "விஸ்வரூபம் 2' ரிலீஸ் தள்ளிப்போனது. இன்னும் சில வார இடைவெளியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்த கமல், தனது அரசியல் பார்வையை சொல்லும் படமொன்றிலும் நடிக்க முடிவு செய்தார். ஏற்கெனவே அவர் நடித்த "இந்தியன்', அரசியல் பின்னணியில் அமைந்த கதையாக இருந்ததால் அதன் 2-ஆம் பாகத்தில் நடிக்க பேச்சு நடந்தது. ஷங்கர் மீண்டும் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக, கடந்த 2 ஆண்டுக்கு முன்பே "சபாஷ் நாயுடு' படத்தை நடித்து இயக்கி வந்தார் கமல். அமெரிக்காவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடித்து சென்னையில் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது அப்படத்தை இயக்கி முடிக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.