பி.என்.பி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கிரிஷ்ணம்'. அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு இப்படத்துக்கு ஒளிப்பதிவும் செய்கிறார் தினேஷ் பாபு. மலையாளத்திலும், கன்னடத்திலும் பிரபல ஒளிப்பதிவாளராக விளங்கும் இவர், முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும் ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே இந்தப் படம். உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது இப்படத்தின் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இணையத் தள பதவிறக்கம் என்ற நிலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம் இந்தப் படத்தில் பயன்படுத்தபட உள்ளது.
இணையதளத்தில் திருட்டுத்தனமாய் இப்படத்தை வெளியிட முடியாது என படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.