படப்பிடிப்புக்கு திரும்பிய ஸ்ரீதேவி மகள்
ஸ்ரீதேவியின் செல்ல மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில், "தடக்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால், ஸ்ரீதேவியுடன் அவரால் துபை செல்ல முடியவில்லை. அம்மாவின் திடீர் மரணம் தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் அவர், கடந்த 6-ஆம் தேதி தனது பிறந்தநாளை, தன் சித்தப்பா அனில் கபூரின் மகள் சோனம் கபூர் மற்றும் குடும்பத் தோழிகளுடன் எளிய முறையில் கொண்டாடினார். அப்போது அதிக சோகம் ததும்பிய மனநிலையுடன் காணப்பட்டார் ஜான்வி. இதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்தார் தந்தை போனி கபூர். சென்னைதான் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த இடம் என்பதால், அவர் சென்னை வந்தால் அதிகம் தங்கும் கிழக்கு கடற்கரை சாலை பங்களாவில் மூன்று நாள்கள் தங்கியிருந்தார். பின்னர் ஸ்ரீதேவியின் அஸ்தியை அங்குள்ள ஈஞ்சம்பாக்கம் கடலில் தனது தந்தை மற்றும் தங்கை குஷியுடன் இணைந்து கரைத்தார். அதன் பின்னர் அங்கு தங்கிருந்த ஜான்வி இனிமேலும் இப்படியே இருக்கக்கூடாது என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டார். இப்போது, மீண்டும் "தடக்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீத அளவில் முடிந்து விட்டது. மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.