எப்படி வாழ வேண்டும் என்று யாரும் சொல்லத் தேவையில்லை!

கல்யாணம் முடிந்த ஒரு சில நாள்களிலேயே, தான் நடித்துக்கொண்டிருந்த படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார், நடிகை சமந்தா.
எப்படி வாழ வேண்டும் என்று யாரும் சொல்லத் தேவையில்லை!

கல்யாணம் முடிந்த ஒரு சில நாள்களிலேயே, தான் நடித்துக்கொண்டிருந்த படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார், நடிகை சமந்தா. திருமணத்துக்குப் பிறகு, பெரும்பாலான நடிகைகள் நடிப்புக்கு "பை' சொல்வது வழக்கம். ஆனால் சமந்தாவோ, அதில் சற்று வித்தியாசமானவர். திருமணத்துக்குப் பிறகும், பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். "இரும்புத்திரை' படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தவருடன் ஒரு உரையாடல்...

விஜய், விக்ரம், சூர்யா இப்போது விஷால் எல்லோருடனும் ஜோடி சேர்ந்து விடுவதுதான் லட்சியமா...?
இது தங்கமான தருணம் எனக்கு. அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. விஷால் எனக்கு ரொம்பவே பிடித்தமானவர். அவருடைய துணிச்சல் எனக்கு பிடிக்கும். முன்னணி இயக்குநர்கள் கதை சொல்ல காத்திருக்கும் போது, அதையெல்லாம் விட்டு விட்டு சினிமா உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறார். இப்போது தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என யோசிக்கிறார். இந்த வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பு இருப்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம். அவர் ஒரு திறமைசாலி. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. 
இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் அடுத்த கட்ட நடிகர்களுடனும் நடிக்கிறீர்கள்...?
பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி எப்போதுமே செம காமெடிதான். ஓர் ஊரை மையமாகக் கொண்ட கதையில் நான் படம் நடித்ததில்லை. முழுக்கப் பாவாடை தாவணி, சிலம்பம் கற்றுக்கொண்டு "சீமராஜா' படத்தில் நடித்தது நல்ல அனுபவம். நான் சென்னை பொண்ணு. பிறந்து, வளர்ந்தது எல்லாமே இங்கேதான். ஒரு திருவிழாவுக்கு கூட கிராமத்துப் பக்கம் போனது கிடையாது. இந்தப் படத்தில் நடிக்கும் போது, கிராமத்து வாழ்க்கையை இத்தனை காலம் இழந்தது தவறென்று தோன்றியது. தியாகராஜன் குமாரராஜா படமான "சூப்பர் டீலக்ஸ்' அனைவருக்குமே அதிர்ச்சியாக இருக்கும். இதில் விஜய்சேதுபதியுடன் நடிக்கிறேன். சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி இடையே போட்டி கிடையாது. ஆனால் அவர்களது முந்தைய படத்துடனே போட்டியிட்டு வருகிறார்கள். இருவரையுமே எனக்கு பிடிக்கும். 
திருமணத்துக்குப் பின் பட வாய்ப்புகள் குறைந்து விடும் என்பது உங்கள் விஷயத்தில் உடைந்திருக்கிறதே...?
திருமணத்துக்குப் பிறகு வெளியான "ரங்காஸ்தலம்' வெற்றிப்படமாக அமைந்தது. திருமணத்தால் படத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. நல்ல கதாபாத்திரங்கள், சிறப்பாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாராலும் என்னைப் புறக்கணிக்க முடியாது என நினைக்கிறேன். திருமணமான நடிகை என்ற தோற்றத்தை உடைப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும். ஆனால், உடைப்பது மட்டும் போதாது.
தொடர்ச்சியாகப் பல வெற்றிப் படங்களைத் தந்தால் மட்டுமே, "திருமணமான நடிகைகள் கதாநாயகியாக நடிக்க முடியாது' என்ற சிந்தனையை மாற்ற முடியும். ஒரு கதாநாயகியாக, திருமணமான பிறகும் நடிப்புத் துறையில் எதிர்காலம் உள்ளது என்பதற்கு எதிர்காலத்தில் வரும் நடிகைகளுக்கு நான் முன்னோடியாக இருக்க விரும்புகிறேன்.
சினிமா என்பதை தாண்டி, திருமணத்துக்குப் பின் மாற வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.. எந்தளவுக்கு நீங்கள் மாறியிருக்கிறீர்கள்...?
எனக்கு நிறைய கோபம் வரும். திருமணத்துக்குப் பிறகு அது கொஞ்சம் குறைந்து வந்திருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு மாலை 6 மணிக்கு வீட்டுக்குப் போய் விடுவேன். அங்கே சினிமா பற்றி எந்த பேச்சும் இருக்காது. ஆனால், அவரோடு நிறையச் சண்டை போடுவேன். ஆனால், நாங்கள் சண்டை போடுகிறோம் என்பது பக்கத்தில் இருக்கிறவர்களுக்குக் கூடத் தெரியாது. சத்தத்தைக் கூட்டாமல், இருவரும் ஜாலியாகச் சண்டை போட்டுக் கொள்வோம். பார்ப்பவர்கள் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைப்பார்கள். 
திருமணமானவர் கதாநாயகியாகவும் வெற்றிகரமாக இருக்க முடியும் என்று நாக சைதன்யா நம்புகிறார். "இதை ஒரு வேலையாக மட்டுமே பாவித்துக்கொள்' என்று அவர் சொன்னதுதான் சிறந்த ஆலோசனை.
வலுவான கதைகளில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா...?
நிச்சயம் எதிர்பார்க்கிறேன். வெறும் கதாநாயகியாக மட்டும் நடிக்க அல்ல. "நடிகையர் திலகம்' படத்தில் கூட சாவித்ரியாக நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் அது எனக்கு பொருந்தாது என்று உணர்ந்தேன். ஆனால், எனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை என்னால் தொடர்புப்படுத்தி உணர முடிந்தது. போஸ்டரில் இருக்க வேண்டும், ஐந்து பாடல்களிலும் ஆட வேண்டும் என்பதிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை.
தமிழைவிடத் தெலுங்கில், நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் அதிகமாக நடித்துள்ளேன். எதிர்காலத்தில் இது மாறும் என நம்புகிறேன். ஆனால், சில இயக்குநர்கள் மட்டுமே பெண்ணின் பார்வையில் இருந்து எழுதுகிறார்கள். பெரும்பாலான பெண் கதாபாத்திரங்கள் இங்கு ஆணுடைய பார்வையிலிருந்தே எழுதப்படுகின்றன. இதுதான் இங்கே பெரும் சிக்கல். 
திருமணத்துக்குப் பிறகும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்து வருவது எதற்காக...?
கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தால் கண்டிப்பாக என்னைப் பற்றித் தவறாகப் பேசுவார்கள் என்று தெரியும். ஆனால், கடற்கரையில் புடவையா கட்ட முடியும்? நான் கவனத்தை ஈர்ப்பதற்காக அதைப் பகிரவில்லை. ஆனால், நான் எதைப் பகிர வேண்டும் என்பதைச் சொல்ல யாருக்கு உரிமை உள்ளது? நான் திருமணமான பெண் என்ற காரணத்தாலேயே அவதூறாகப் பேசுகிறார்கள். என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்லத் தேவையில்லை. நான் பயப்படவுமில்லை, இந்தப் பிரச்னைக்குள் சிக்கவும் விரும்பவில்லை.
தெலுங்குத் திரையுலகில் "காஸ்டிங் கவுச்' பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளதே...?
தெலுங்கு சினிமா அல்லது சினிமாவில் மட்டும்தான் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறதா என்பதே பெரிய கேள்வி. இது அனைத்துத் துறைகளிலும், அனைத்துப் பணியிடங்களிலும் உள்ளது. நான் 8 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். இங்கே சில கறுப்பு ஆடுகள் உள்ளன. ஆனால் அவர்களைவிட அதிகமாக, நிறைய நல்ல, நேர்மையான, அழகான மனிதர்கள் இங்கு உள்ளனர். அந்தச் சில கறுப்பு ஆடுகளை அடையாளம் காண ஓர் அமைப்பைத் தொடங்கவுள்ளோம். இதனால் யாரும் இனி பயம் கொள்ளக் கூடாது. சரியான பாதையை நோக்கி எடுத்து வைக்கப்படும் முதல் அடி இது. கார்ப்பரேட் நிறுவனங்கள் போல சினிமா துறையிலும் சில கடுமையான விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்.
சென்னையுடன் எந்தளவுக்கு தொடர்பு உள்ளது...?
பல்லாவரம்தான் எனக்கு எல்லாம். இப்போதும் என் உறவினர்கள் எல்லாம் இங்கேதான் இருக்கிறார்கள். விமான நிலையத்தில் இருந்து பக்கம் என்பதால், முதலில் அங்குதான் செல்வேன். 
- ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com