இன்று பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு நோயின் பிடியில் இருக்கிறார்கள் . நோயைக் குணப்படுத்துவதை விட மருந்துகளை விற்பனை செய்வதிலேயே வியாபார நோக்கிலான மருத்துவ உலகம் குறியாக இருக்கிறது. சிகிச்சை என்கிற பெயரில் மருந்துகளுக்கு அடிமைப்படுத்தி வியாபாரம் செய்வதே இவர்களின் நோக்கம். குறிப்பாக நீரிழிவு நோய்க்கான மருந்து வியாபாரம் அமோகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட மருந்துகளில் எவ்வளவோ தடை செய்யப்பட்ட மூலப்பொருள்கள் உள்ளன. ஆனால் யாரும் இது பற்றி கண்டு கொள்வதில்லை. இந்த உண்மையை விளக்கும் விதமாக உருவாகி வரும் படம் "ஒளடதம்'. ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் கதை எழுதி தயாரித்து நடிக்கிறார் நேதாஜி பிரபு. சமைரா கதாநாயகியாக நடிக்கிறார்.
திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ரமணி. ஒளிப்பதிவு ஸ்ரீரஞ்சன் ராவ். இசை வி.தஷி, சண்டைப் பயிற்சி தேவா. மருத்துவ உலகின் கருப்பு பக்கங்களைப் புரட்டிக் காட்டும்படியான திரைக்கதை. தவறான மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்த அந்தச் செய்தி காலப்போக்கில் சென்று விடுகிறது. மெடிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் சமூகத்தில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக வெளிவரவுள்ளது.