நல்லதோர் அறிமுகம்
சர்ஜுன் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் "எச்சரிக்கை' இது மனிதர்கள் நடமாடும் இடம். கதை சொன்ன நேர்த்தியில் இப்படத்துக்கு பல்வேறு தரப்பிலும் பரவலான பாராட்டுகள். இதில் தாமஸ் கதாபாத்திரத்தில் நடித்த விவேக் ராஜ்கோபால் பெரும் கவனம் பெற்றார். அவரிடம் பேசும் போது... ""ரஜினியின் ஆஸ்ரம் பள்ளியில் படித்தேன். கல்லூரிப் படிப்பு லயோலாவில். கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன், எனக்கு பயிற்சி அளித்தவர் நடிகர் குருசோமசுந்தரம். நல்லதொரு சினிமா வாய்ப்புக்காகச் சில ஆண்டுகள் காத்திருந்தேன். இந்தப் படம் குறித்து இயக்குநர் சர்ஜுனை விடாமல் துரத்தினேன். அவர் நடிகர்களைத் தேர்வு செய்யும் போது நானும் கூடவே இருந்தேன். அது கூட எனக்கு ஒரு பாடமாக இருந்தது. இயக்குநரின் எண்ணம் , எதிர்பார்ப்பு பற்றி அறிய முடிந்தது. ஒரு கட்டத்தில் அவர் என்னைத் தேர்வு செய்தார். எனக்கு ஆச்சரியம்.
உடன் நடித்த சத்யராஜ், கிஷோர், வரலட்சுமி என்று ஏற்கெனவே பிரபலமானவர்கள் இருக்கும் போது இயக்குநர் நான் ஏற்ற தாமஸ் கதாபாத்திரத்துக்கு பிரபலமான ஒரு நடிகரைக் கூட நடிக்க வைத்திருக்க முடியும், இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் என் மேல் வைத்த நம்பிக்கை எனக்கு எப்படியும் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கொடுத்தது. இந்த அனுபவங்களை கொண்டு நீண்டு பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். நல் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்'' என்றார்.