முக நூலிலிருந்து....
இக்கரைக்கு
அக்கரையும்
பச்சை இல்லை...
அவ்வளவும் வறட்சி.
- கோகி சுரேஷ்
----------
* "இறந்த பின்பும்
ஒரே குழியில் புதைபட வேண்டும்'
என்றெல்லாம்
பேசிக்கொண்டவர்கள் நாம்.
காலம் கற்றுத் தந்திருக்கிறது,
பார்த்தாயா?
பார்த்தும்...
எது குறித்தும்
பேசாமல் பிரிவதற்கு.
- இளம்பிறை
-----------------
* எந்தப் பேரவலத்தை
பொறுத்துக் கொள்ள முடியாமல்
எங்கள் மண்ணிலிருந்து
புலம்பெயர்ந்தாய்?
மழையே...
- மணிமாறன்
-----------------
* அன்பு என்பது
எல்லா ஈகோவையும்
தரைமட்டமாக்கி...
அப்படியே எதிர்தரப்பிடம்
சரணாகதி ஆவது.
கண்ணில் காற்று நிரம்ப...
பரவசமாய் பறந்து மிதப்பது.
"நான் ரொம்ப சின்ன உயிர்...
உன் உள்ளங்கையில்
ஏந்தி வச்சுக்கோ''
என்று சொல்வது.
- சந்திரா தங்கராஜ்
-----------
* சக மனிதர்களின் மீதான சகிப்புத்தன்மை அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டதாகவே எண்ணுகிறேன். இன்று ஒரு பேருந்து பயணத்தில், என்னருகே அமர்ந்திருந்த நபர், அவருக்கு அருகாமையில் எதிர் இருக்கையில் இருந்த இரு நபர்களிடம் சண்டைக்குப் போனார். காரணம் என்ன தெரியுமா? அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வருகிறார்களாம். எப்போதும் பேருந்துப் பயணத்தில் உறக்கத்தில் ஆழ்ந்துவிடும் எனக்கு இன்று தூக்கம் வருமா என்ன?
- செ.சண்முகசுந்தரம்
---------------
* "டாக்டர்... நீண்ட நாள் வாழணும்னா
என்ன செய்யணும்?‘'
"நீங்க... முதல்லே கல்யாணம்
பண்ணுங்க...''
"ஏன்? அதனாலே என்ன ஆகும்?‘'
"இல்லை, இந்த மாதிரி
எண்ணமே உங்களுக்கு வராது.''
- நெய்வேலி மணிகண்டன்
கிருஷ்ணமுர்த்தி
-----------------
* இந்த உலகத்தில் -
யார் வேண்டுமானாலும்,
எது வேண்டுமானாலும்,
எப்போது வேண்டுமானாலும்,
எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
எதுவும் நிலையில்லை.
மாற்றம் ஒன்றே மாறாதது.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டால்,
எதற்கும் கவலைப்பட அவசியமில்லை.
- எஸ். வெங்கட சுப்ரமணியன்
-----------------
* முன்பெல்லாம்
இயல்பாக
இருப்போம்...
நடிப்பது
சிரமமாயிருந்தது.
இப்போது எல்லாருமே
நடிக்கிறோம்...
இயல்பாக இருப்பது
சிரமமாயிருக்கிறது.
- பாஸ்கர்.எம்
--------------
வலைத்தளத்திலிருந்து...
முப்பதாண்டுகளுக்கு முன்பு நான் வாழும் இடத்தில் மரங்கள் ஏராளமாக இருந்தன. ஒரு மரம் இன்னொன்றைப் போல் இருக்காது. உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் எந்த ஒரு மரத்தையாவது உற்றுப் பாருங்கள், அதன் அடிமரம், அதன் கிளைகள், அதன் இலைகள் - அது பூக்கும் மரமாக இருந்தால் அதன் மலர்கள் கிளைகளினூடே சூரியனின் ஒளிக்கதிர்கள் வரும் அழகு, உள்ளே புகுந்து போகும் காற்று...
மரங்களை உற்றுப் பார்ப்பதே ஒரு வகைத் தியானம்.
நான் இருக்கும் வீட்டின் அருகே விளையாட்டுத் திடல் இருக்கிறது. அதன் ஓரங்களில் எத்தனையோ மரங்கள் இருக்கின்றன, அவை புயலால் அழிக்கப்படுவதற்கும் மேலாக மனிதனால் அழிக்கப்படுவதுதான் அதிகம். இப்போது களை இழந்து கிடக்கிறது.
http://manjuvantham.blogspot.in