இணையவழிக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பயனளிப்பதாகவும், வசதியாகவும் இருக்கின்றன. வகுப்பறை கல்வி, தனிவகுப்பு பயிற்சி போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. தற்போது திறந்தநிலை இணையவழி படிப்புகளை நோக்கி மாணவர்கள், வேலையில் இருப்போர் விரும்பிச் செல்கின்றனர்.
அடிப்படையில் 5 வணிக மாதிரிகள் இந்திய இணையவழி கல்வித் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகின்றன. அவை தொடக்கநிலை - மேல்நிலைக் கல்வி, தேர்வுக்கான தயாரிப்பு, மீள்திறன் மற்றும் இணையவழிச் சான்றிதழ், உயர்கல்வி மற்றும் மொழிக்கல்வி, மற்றும் சாதாரண கற்றல் ஆகியவையாகும். 2016-இல் 16 லட்சம் பேராக இருந்த கட்டணம் செலுத்தி இணைய வழிக் கல்வி படிப்போரின் எண்ணிக்கை 2021-இல் 96 லட்சம் பேராக, அதாவது 6 மடங்காக உயரும் என ஆய்வு தெரிவிக்கிறது. இணையம் வழியாக கல்வித் தகவல்களை தேடுவோரின் எண்ணிக்கை 44 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் தெரிகிறது.
மீள்திறன் பெற விரும்புவோர், இணையவழிக் கல்வி பயின்று சான்றிதழ் பெற விரும்புவோரே பெரும்பாலும் கட்டணம் செலுத்தி படிக்கின்றனர். தகவல் தொழில்நுட்பப் பணியில் உள்ளோர் பெரும்பாலும் தனியாக நேரம் ஒதுக்காமல் இணையம் மூலம் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அதிகமாகிவிட்டனர். இணையதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. எனவே இணையவழிக் கல்வி இப்போது எளிதாகிவிட்டது.
பொறியியல், மருத்துவம், வணிகம், கலை என நேரடியாகக் கல்விநிறுவனங்களில் சேர்ந்து படித்தால் அதிக கட்டணம் கொண்ட (ரூ. 8-10 லட்சம்) செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு மாற்றாக குறைந்த கட்டணத்தில் (ரூ. 15- 20 ஆயிரம்) இணையவழி வகுப்புகள் இருப்பதால் அதில் சேர்ந்து பயில்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
பாடங்கள் தொடங்கிய நாளில் இருந்து ஏகப்பட்ட, பல தேவையான, பல்வேறுவிதமான பாடக்குறிப்புகள் இணையத்தில் கிடைப்பதால், அதில் சேர்ந்து பயில அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
2016-இல் Simplilearn, BYJU, Edupristine ஆகிய நிறுவனங்கள் இணைய வழிக் கல்வித்துறையில் தங்கள் முதலீட்டை ரூ.68 கோடிக்கும் மேலாக உயர்த்தியுள்ளன.
எனினும், இந்த டிஜிட்டல் உலகிலும், பெரிய கல்வி நிறுவனங்கள் நடத்தும் பாரம்பரிய வகுப்பறை பாடங்களில்தான் உயர்தர கல்வி கிடைக்கும் என பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர். இதுதான் இத்துறையில் புதிதாக நுழைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது.
இந்தியாவில் திறந்தநிலை கல்வி, தொலைநிலை கற்றல் சேர்க்கைகள் 2021-இல் 1 கோடி அளவுக்கு உயரும். இந்த வளர்ச்சி ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தில் 10 சதவீதமாக இருக்கும். வரும் 2050-இல் 28 கோடி வேலை தேடுவோர் பணிச் சந்தையில் நுழைவார்கள். இது தரமிக்க திறன்களை அதிகரிப்பதற்கான பயிற்சிக்கு கதவுகளை திறந்துவிடும் வாய்ப்பாக இருக்கும்.
இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டுக்கு கல்வி தலையாயது ஆகும். இந்நிலையில், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முழக்கம் மெதுவாக உருவம் பெற்று வருகிறது. மரபுவழி கல்வியை நவீன, தொழில்நுட்பவழி கல்வி முறைகள் முந்தி வருகின்றன. உடனடி வேலைநீக்கம், வேலையின்மை, தானியங்கி கருவிகளின் ஆதிக்கம் காரணமாக தொழில்முறைப் பணியாளர்கள் தங்கள் பணிகளினூடே தங்கள் திறனை உயர்த்திக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதற்கு இணைய வழிக் கல்வி மிகவும் பயன்படும் என்பதால் இணையவழிக் கல்வியில் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் மிகவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
- இரா.மகாதேவன்