தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டதுமே, நிறைய மாணவர்கள், தகவல் தொழில்நுட்பம் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டுகிறார்கள். பி.காம், பிபிஏ போன்ற வணிகவியல், நிர்வாகவியல் படிப்புகளின் பக்கம் சாய்ந்துவிட்டார்கள்.
உலக அளவில் எத்தகைய மாற்றங்கள் வந்தாலும், எம்பிஏ போன்ற படிப்புகளைப் படித்தவர்களுக்கு எப்போதுமே வேலைவாய்ப்புகள் உறுதியாக உள்ளன. காரணம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனமானாலும், நிர்வாகம், மார்க்கெட்டிங் போன்றவற்றைத் தவிர்க்கவே முடியாது. அதனால் வேலைவாய்ப்புகளுக்கு என்றுமே பஞ்சம் இல்லை.
இந்தோ -ஜெர்மன் சேம்பர் காமர்ஸ் நிறுவனத்தில் கீழ் செயல்படும் அமைப்பு, "இந்தோ - ஜெர்மன் ட்ரெயினிங் சென்டர்'. பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு இரண்டாண்டு போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (PGPBA) என்ற படிப்பையும், ஏற்கெனவே நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஓராண்டு எக்ஸிகியூட்டிவ் பிசினஸ் மேனேஜ்மெண்ட் புரோகிராம் (EBMP) என்ற படிப்பையும் இந்த இந்தோ - ஜெர்மன் ட்ரெயினிங் சென்டர் வழங்கி வருகிறது. இதில் என்ன சிறப்பம்சம் என்றால், இதில் பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு உடனே வேலை கிடைத்துவிடுகிறது.
இந்த இரு படிப்புகளையும் பற்றி இந்தோ - ஜெர்மன் சேம்பர் காமர்ஸின் மண்டல மேலாளர் எஸ்.ராஜுவிடம் பேசினோம். அவர் கூறியதிலிருந்து:
"இந்தியாவில் ஏறக்குறைய 1200 ஜெர்மன் கம்பெனிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 120 கம்பெனிகள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை உருவாக்கவே நாங்கள் இந்தப் படிப்புகளை நடத்துகிறோம். போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பில் சேர விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதில் தேறியவர்களை குரூப் டிஸ்கஷனில் பங்கு பெற வைக்கிறோம். அதிலும் தேறிவர்களுடைய கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கிறோம். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் எங்களுடைய இந்தப் படிப்பில் சேரத் தகுதியானவர்கள் ஆவார்கள்.
இந்தோ -ஜெர்மன் சேம்பர் காமர்ஸ் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யக் கூடிய 2-3 ஆண்டுகள் அனுபவம் உள்ள, திறமை வாய்ந்த பணியாளர்கள் எக்ஸிகியூட்டிவ் பிசினஸ் மேனேஜ்மென்ட் புரோகிராம் படிப்பில் சேரத் தகுதியானவர்கள் ஆவார்கள். அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் தங்களுடைய நிலையை, வேலைத்திறமையை உயர்த்திக் கொள்ள இந்தப் படிப்பு உதவும்.
புரோகிராம் இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு "தியரி - பிராக்டிகல்' என்ற இரட்டை முறையில் கல்வி கற்றுக் கொடுக்கிறோம். முதல் ஒன்றரையாண்டுகள் அடிப்படையான நிர்வாகவியல் கல்வியைக் கற்றுக் கொடுக்கிறோம். அடுத்த ஆறு மாதங்களில் நேரடிப் பயிற்சி - இன்டர்ன்ஷிப் பயிற்சி - பெறுவார்கள். இந்திய மற்றும் ஜெர்மன் கம்பெனிகளில் இந்த நேரடிப் பயிற்சி அளிக்கப்படும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நேரடிப் பயிற்சி பெறும் நிறுவனத்தில் தனியாகப் பயிற்சி என்று இருக்காது - வேலை செய்து கொண்டே பயிற்சி பெறுவார்கள்.
இந்தப் படிப்புக்கென்று தனியாக புராஜெக்ட் ஒன்றை மாணவர்களுக்குக் கொடுத்து அதைச் செய்யச் சொல்ல மாட்டோம். மாணவர்கள் நேரடிப் பயிற்சி பெறும் நிறுவனம், தனது வளர்ச்சிக்காக அவ்வப்போது மாற்றங்களைச் செய்து கொண்டே இருக்கும். அது அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கான புராஜெக்ட்
(LIVE PROJECT) ஆகும். நேரடிப் பயிற்சி பெறும் மாணவர்கள் அந்த புராஜெக்ட்டில் பங்குபெறுவார்கள். பயிற்சி பெறுவார்கள்.
இதில் என்ன நன்மை என்றால், இன்டர்ன்ஷிப்பில் சிறப்பாக பணிபுரியும் மாணவர்களை அந்த நிறுவனங்களே வேலைக்கு எடுத்துக் கொள்வதுதான். எங்களுடைய சென்னை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 252 மாணவர்கள் BMW, DORMA, WABCO உள்ளிட்ட பல ஜெர்மன் கம்பெனிகளிலும், ரெனால்ட் நிசான், மஹிந்திரா & மஹிந்திரா, இன்போசிஸ், ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட் உள்ளிட்ட பல பிறநாட்டு நிறுவனங்களிலும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நாங்கள் வேலை சார்ந்த படிப்பையும் பயிற்சியையும் மட்டும் கொடுக்கவில்லை. இங்கு பயிலும் மாணவர்களின் ஆளுமைத்திறன்கள் மேம்படுவதற்கும் பயிற்சி அளிக்கிறோம்.
நாங்கள் சொல்லித்தரும் இந்தப் படிப்பு, அனைத்து நிர்வாகவியல் படிப்புகளும் உள்ளதாகும். மனிதவளம், மார்க்கெட்டிங், நிதி என நிர்வாகவியலில் உள்ள எல்லாப் பிரிவுகளும் இதில் உள்ளடங்கியதாகும்.
எங்களிடம் பயிலும் முதல் மதிப்பெண் பெற்ற சிறந்த மாணவரை ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பி வைத்து, அவருக்கு 1 மாத காலம் ஜெர்மன் மொழி கற்றுத் தர ஏற்பாடு செய்கிறோம். எங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் இன்டர்ன்ஷிப் செய்யும் நிறுவனத்தில் வேலை கிடைக்காவிட்டால், அவர்களுக்கு வேலை கிடைக்க நாங்கள் உதவுகிறோம்.
ஆண்டுக்கு 17 முதல் 20 மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். ஒவ்வொரு மாணவருக்கும் தனியான கவனம் செலுத்தி அவர்கள் கல்வி, திறமைகள், ஆளுமைத் திறன்களை மேம்படுத்தவே இந்த ஏற்பாடு. நிறைய மாணவர்கள் இருந்தால், இது சாத்தியமில்லை'' என்றார்.
- ந.ஜீவா