இளைஞர்களே... நீங்கள்தான் சிறந்தவர்!
ஒவ்வோர் இளைஞனும் தான்தான் சிறந்தவன் என எண்ணி செயல்படத் தொடங்கினால் சாதிக்க முடியாத எதுவுமே இவ்வுலகில் இல்லை.
தனித்து செயல்பட தைரியம், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் நான் என சொல்பவர்களை அகங்காரம் பிடித்தவர்கள் என்பார்கள். தனி மனித ஆளுமை உள்ளவர்களால்தான் தனித்துவத்துடன் உயர முடியும். மற்றவர்கள் லட்சத்தில், கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
ஏற்கெனவே இருக்கும் பாதையில் செல்லும் நபர் சராசரியான நபர்தான். குறிப்பிட்ட பகுதியைச் சென்றடைய அந்த வழியே பல மணி நேரம் பயணம் செய்யவேண்டியிருக்கும். ஆனால், புதிய பாதையைத் தேர்வு செய்து துணிச்சலுடன் செல்பவர்கள் புதிய பாதையை உருவாக்கியவர் என்ற பெருமையுடன், அவருக்கு பின்வருபவர்களுக்கும் புதிய பாதையைக் காண்பித்தவர் என்ற பெருமையை அடைய முடியும்.
தனித்துவம் உள்ள ஒருவர்தான் தலைமைப் பதவியை எட்ட முடியும். மற்றவர்கள் அவர் தலைமையில் குழுவாக மட்டுமே செயல்பட முடியும். இன்று வெற்றி பெற்ற பலரின் வாழ்க்கை நிகழ்வுகளை புத்தகங்களில் படித்துப் பார்த்தால் ஏதாவது ஒன்றில் அவர் காட்டிய அக்கறையும் அவர் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையும் மட்டுமே அவரின் உயர்வுக்கு வழி வகுத்திருக்கும்.
மற்றவர்களைப் பற்றி அதிக நேரம் சிந்திப்பவர்களால் வெற்றி இலக்கை எட்டுவது சிரமம். பக்கத்து வீட்டுக்காரர் என்ன செய்தார்? என்ன செய்கிறார்? அவர் ஏன் தாமதாக வருகிறார்? இப்படி யாரோ ஒருவரை பற்றி மட்டுமே சதா நினைக்கும் ஒருவரால் தனது நிலை பற்றி சிந்திக்க நேரமிருக்காது.
தனது பலம் என்ன? தான் எதில் சிறப்பாக இருக்கிறோம்? என தொடர்ந்து சிந்திப்பதும், வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை குறித்த புத்தகங்களை படிப்பதும் நமக்கு புதிய ஒரு பாதையைக் காட்டும்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் பணிபுரியக் கூடிய மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்யும் பொழுது, தன்னம்பிக்கையும், புதிய வழிமுறையைக் கண்டுபிடித்து விரைவாக பணிகளை முடிக்கும் தனித்திறன் கொண்டவர்களை மட்டுமே தன்னிடமே வைத்துக் கொள்ள நினைக்கிறது.
மற்றவர்கள் கண்டுபிடித்த பழைய பாதையில் மட்டுமே பயணம் செய்யும் பணியாளர்களை வேலையை விட்டுத் தூக்கி விடுகிறது.
இன்னும் சொல்லப் போனால், "நான் ஏன் இவரிடம் வேலை செய்ய வேண்டும். எனக்கு கீழ் பல நூறு பேர் வேலை செய்ய வேண்டும்' என்று எண்ணி தனியாகச் செயல்பட தொடங்குபவர்கள் மட்டும்தான் பெரிய நிறுவனங்களுக்கு தலைவராக முடியும். எனவே. இளைஞர்களே நீங்கள்தான் உலகத்திலேயே மிகச் சிறந்தவர் என்ற நம்பிக்கையை உங்கள் மனதுக்குள் வையுங்கள்.
- வி.குமாரமுருகன்