தேசிய சிறு தொழில் கழகம் சிறு, குறு தொழில் முனைவோருக்கு பல்வேறு சேவைகள், உதவிகளைச் செய்து வருகிறது. மூலப்பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவது, உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்துதல், கண்காட்சி அரங்கு அமைக்க உதவுதல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மூலப் பொருட்களை வங்கிக் கடனுதவி மூலம் வாங்கித் தருவது உள்ளிட்ட உதவிகளையும் வழங்குகிறது.
வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கு சிறு, குறு தொழில் முனைவோர் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்காக தேசிய சிறுதொழில் கழகம் சிறு, குறு தொழில் முனைவோருக்கு உதவிபுரிகிறது. அதன் மூலம் வங்கிகளில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடனுதவி திட்டங்கள் குறித்து தொழில் முனைவோருக்கு தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தேசிய சிறுதொழில் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட வங்கிகள் மூலமாக கடனுதவி பெற்றுத் தர ஏற்பாடு செய்வது உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதற்காக தேசிய சிறுதொழில் கழகம் தனியாக இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளம் மூலமாக தொழில் முனைவோர் தங்களுக்கு கடனுதவி தேவையென பதிவு செய்து விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட புரிந்துணர்வு செய்து கொண்ட வங்கிகளுக்கு அனுப்பி கடனுதவி பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை தேசிய சிறுதொழில் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வங்கிகளுக்கு சிறு, குறுந்தொழில் முனைவோர் சென்று வரும் கால, நேர விரையம் தவிர்க்கப்படுகிறது.
கடனுதவி கோருவதற்கான தேசிய சிறுதொழில் கழகத்தின் இணையதள முகவரி :
http://www.nsicffconline.in/