சுடச் சுட... செய்திகள்! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

வெளவால்  இருட்டில் பறக்கும்போது  எப்படி  எதிலும் முட்டாமல்,  மோதாமல் பறக்கிறது தெரியுமா?''  என்று  லெஃப்டினென்ட்  கர்னல் செழியன் கேட்டார்.
சுடச் சுட... செய்திகள்! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 47
"வெளவால்  இருட்டில் பறக்கும்போது  எப்படி  எதிலும் முட்டாமல்,  மோதாமல் பறக்கிறது தெரியுமா?''  என்று  லெஃப்டினென்ட்  கர்னல் செழியன் கேட்டார். 
"ஒரு வேளை அது கண்ணுல லைட் இருக்கோ!'' என்று ஒருவர் சந்தேகம் கேட்க,  "இல்லை இல்லை அதோட ஒலியிலதான் ஒளியே இருக்கு''  என்று பேராசிரியர் புதிர் போட்டார். அப்போது தலைக்கு மேல் ஏதோ ஒன்று பறந்து போக அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனோம். 
"அட! வெளவால்தான். ஒருவேளை நாம பேசுன ஒலி அதுக்கு கேட்டுருச்சோ என்னமோ?'' என்று ஒருவர் ஆச்சரியமாகச் சொன்னார். அப்போது சிறு பருந்து அளவுள்ள வெளவால் ஒன்று எங்கள் அனைவரின் தலைக்கு மேல் வட்டமிட்டுப் பறந்து ஒரு சுற்றுச் சுற்றி வந்தது. அத்தோடு எங்களுக்கு முன்னே இருந்த நெருப்புக்கு மேல் பறந்த சில பூச்சிகளையும் பிடித்துவிட்டுச் சட்டென்று பறந்து சென்றது. 
"பார்த்தீர்களா இப்போது வந்த வெளவால் கொசுக்களையும், பூச்சிகளையும் பறந்து பிடித்ததை. கொசுக்களால் நாம் அடையாத துன்பம் இல்லை. ஒரு காலத்தில் இந்தக் கொசுக்கள் நம் தூக்கத்தைத்தான் கெடுத்தன. இப்போது டெங்கு காய்ச்சலால் பலரின் உயிருக்கு உலை வைக்கின்றன. வெளவால் போன்ற உயிரினங்களை நாம் பாதுகாத்தாலே கொசுத்தொல்லையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்'' என்றார் பேராசிரியர். 
"சரி அதுக்காக நம்ம வெளவாலை வளர்க்கவா முடியும்?'' என்று ஒருவர் கேலியாகக் கேட்டார். 
"வளர்க்க வேண்டாம். வாழ விட்டால் போதும். இயற்கையின் உயிர்ச் சுழற்சியில் ஒன்றை ஒன்று வேட்டையாடிக் கொண்டும், வேட்டையில் இருந்து தப்பித்துக் கொண்டும் வாழ்ந்து விடும்.  தவிர, வேடந்தாங்கல், கூந்தங்குளம், வேட்டங்குடி போன்ற பறவைகள் சரணாலய ஊர்களில் இப்போதும் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காமல் கடல் கடந்து வரும் வரத்துப் பறவைகளாகிய "வலசை'  என்னும் பறவைகளையும், வெளவால்களையும் பாதுகாக்கும் ஊர் மக்களும் நம் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள் தெரியுமா?'' என்றார் பேராசிரியரும் விடாமல். 
"இப்ப நீங்க சொன்ன மூணு ஊர்களும் தமிழ் நாட்டுலதான் இருக்கா?'' என்று ஒரு பெரியவர் ஆர்வமாய்  கேட்டார்.
"யெஸ், வேடந்தாங்கல் செங்கல்பட்டு டிஸ்டிரிக்ட், கூந்தங்குளம் திருநெல்வேலி டிஸ்டிரிக்ட்'', வேட்டங்குடி மதுரை டிஸ்டிரிக்ட்'' என்று பேத்தி தன் கையிலிருந்த ஐ பேட் கூகுள் மேப்பில் பார்த்துச் சொன்னது.
"பாப்பா ஒரு ஞானக் குழந்தை'' என்று ஒரு பெரியவர் அந்தப் பேத்தியைக் கும்பிட்டார். 
"ஐயா, கேப்டன் ஐயா, நாங்க நேத்து ராத்திரியில இருந்து என்ன பேசுனோம்னு கேட்டீங்கள்ல? இப்படித்தான் ஏதாவது ஒன்னத் தொடங்கி அது எங்கயாவது போய் நிக்கும். இப்பப் பாருங்க வெளவால் எப்படி இருட்டுல மோதாம பறக்குதுன்னு கேட்டீங்களா?  பேச்சு அங்கிட்டு இங்கிட்டுப் போயி டெங்குல வந்து நிக்குது!'' என்று அலுத்துக் கொண்டார் மீசைக்காரர்.
"ஆமா, இப்படி சுத்திச் சுத்திப் பேசுனா அவர் டைரியில எதத்தான் எழுதுவாரு? வெளவாலுக்கு டெங்கு வந்ததுன்னு எழுதிரப் போறாரு'' என்று கோமாளி சொல்ல எல்லோரும் சிரித்தோம். 
நான் உடனே பேராசிரியரைப் பார்த்து, "ஐயா, நான் யாரும் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கேப்டன் சார் கேட்ட கேள்விக்கு, எங்களுக்குப் புரியும்படி விளக்கிச் சொல்லுங்கள்'' என்று அன்போடு கேட்டுக் கொண்டேன். அவரும் மகிழ்ச்சியோடு "வகுப்பறைகளில்தான் மாணவர்கள் பாடமாக  நடத்தினால் எதையும் கேட்பதில்லை நீங்களாவது கேளுங்கள்'' எனச் சொல்லிவிட்டு,
"மனிதர்களுக்கு இல்லாத ஓர்  அற்புத ஆற்றல் வெளவால்களுக்கு உண்டு. மனிதர்கள் 80 முதல் 20,000 அதிர்வு எண் அளவுள்ள ஒலி அலைகளை மட்டுமே காதுகளால் கேட்டு உணர முடியும். ஆனால் வெளவால்களோ தங்கள் தொண்டையிலிருந்து 1,50,000 அதிர்வு எண் அளவில் ஒலி அலைகளை பறந்து கொண்டு இருக்கும் போதே உருவாக்குமாம். அந்த ஒலி அலைகள் எதிரே உள்ள பொருள்களில் மோதித் திரும்பி வரும் போது அந்தப் பொருள்களின் தூரத்தை உணர்ந்து கொண்டு அவற்றின் மீது மோதாமல் விலகிச் செல்லுமாம். இந்த மீயொலி அலைகள் தான் வெளவால்களுக்கு உதவுகின்றன'' என்று சொல்லி முடித்தார்.
"வாட் இஸ் த மீனிங் ஆஃப் மீயொலி?'' என்று பேத்தி கேட்க, 
"தட் இஸ் எக்கோ (Echo) எதிரொலி'' என்று விளக்கம் சொன்ன ஹெட்போன் பாட்டி, "நான் சொன்னது சரிதானே?'' என்று தமிழையாவைப் பார்த்துக் கேட்க, அவரும் "சரிதான், மீயொலி என்பது மீண்டு வருகின்ற ஒலி எனும் பொருள் படும்படி சொல்லப்படுவது. எதிரொலி என்றாலும் சரிதான். உதாரணமாகப் பாடி லாங்க்வேஜ் (Body language) எனும் ஆங்கில வார்த்தைக்கு உடல்மொழி என்று சொல்லிக் கொண்டு இருந்தோம். இப்போது மெய்மொழி என்று சொல்லுகிறோம், மெய் என்பது உடல்'' என்று விளக்கிச் சொன்னார்.
 இந்த உரையாடல்களை எல்லாம் மெளனமாக ரசித்துக் கொண்டும் அவ்வப்போது கைதட்டிக் கொண்டும் அமர்ந்திருந்த லெப்டினென்ட் கர்னல் செழியன்,  "அடேயப்பா நான் வந்த பத்து நிமிடத்திற்குள் எத்தனையோ செய்திகளை அறிந்து கொண்டேன். நம் பேராசிரியர் ஐயா சொன்னபடி நாங்கள் போர் விமானத்தில்  பறக்கும்போது எதிரி நாட்டு ரேடார் கருவிகளுக்கு தப்பித்தான் பறக்க வேண்டும். அதே நேரத்தில் நம் நாட்டு ரேடார்களின் மூலம் எதிரி நாட்டு விமானங்களைத் தப்பவிடவும் கூடாது'' என்று சொல்லிவிட்டு, 
"ஓர் ஆச்சரியமான சம்பவம் சொல்லுகிறேன் கேளுங்கள். நம் நாட்டின் பிரதம மந்திரியாக  இந்திராகாந்தி அம்மையார் இருந்தபோது வங்க தேசத்தைக் காப்பதற்காக பாகிஸ்தானோடு நாம் போர் தொடுக்க வேண்டிய சூழல் வந்தது. அப்போது முப்படைகளின் தளபதியாக மானசஷ இருந்தார். 14 நாட்கள் நடந்த அப்போரில், 93,000 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் சரணடைய இந்தியா வெற்றிவாகை சூடியது மட்டுமல்லாமல், வங்க தேசத்தைத் தனி நாடாக அறிவிக்கவும் உதவி செய்தது. வங்க தேசத்திலிருந்து அகதிகளாகப் புலம் பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்தியா அடைக்கலம் தந்தது. அப்போரில் வான்வழித் தாக்குதலில் இந்திய விமானங்களை எல்லாம் பாகிஸ்தான் நாட்டினர் ரேடார் கருவிகளின் மூலம் கண்டறிந்து  தாக்கினர். அப்போது மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாக என் அப்பா எனக்குச் சொல்லியிருக்கிறார்'' என்று சொல்லி நிறுத்தினார் செழியன். 
எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம், "கேப்டன் ஐயா எதா இருந்தாலும் இடையில நிறுத்தாமச் சொல்லுங்க, அதுவும் போர்ச் செய்தியக் கேக்குறப்ப'' என்று மீசைக்காரர் படபடப்பாகச் சொல்ல,
"துடிக்குது  புஜம்... ஜெயிப்பது நிஜம்.. விக்ரம்... ஜெயிக்கிறோம்'' என்று கோமாளி பாட, செழியனும் சிரித்துக் கொண்டே மீண்டும் தொடங்கினார்.
"பாகிஸ்தான் நாட்டு ரேடார் கருவிதானே நம் விமானங்களைக் கண்டறிந்து வீழ்த்துகிறது என்பதைப் புரிந்து கொண்ட மேஜர் ஒருவர் இந்தியப் போர் விமானத்தில் புறப்பட்டு நம் நாட்டைக் காக்க வேண்டும் எனும் உத்வேகத்தோடு அம்பு போல் பாய்ந்து சென்று அந்த ரேடார் கருவி அமைக்கப்பட்டிருந்த டவரின் மீது மோதி அதை அழித்ததோடு மட்டுமல்லாமல் வீர மரணம் எய்தி நம் நாட்டுக்காக உயிர் நீத்தார்''  என்று உணர்வோடு செழியன் சொல்லி முடிக்க,
"பாரத மாதாவுக்கு ஜே! வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!'' என்று உரத்த குரலில் ஓர் இளைஞர் குரல் கொடுக்க, அத்தனை  இளைஞர்களும் எழுந்து நின்று சல்யூட் அடிக்க, லெப்டினென்ட் கர்னல் செழியனும் சட்டென்று எழுந்து அவர்களுக்கு சல்யூட் செய்தார். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் அத்தனை பேரும் ஒரு கணம் மெய்மறந்து போனோம். 
சற்று நேர மெளனத்துக்குப் பின் தமிழையா தொண்டையைச் சற்றே செருமிக்கொண்டு, "வீரர்கள் வாழ்க்கை என்பது எத்தனை புனிதமானது பார்த்தீர்களா?. ஆனாலும் போரில்லாத உலகமே புனித உலகம் என்பது எங்களைப் போன்றவர்களின்  எண்ணம்'' என்றார். அப்போது மீசைக்காரர் செழியனைப் பார்த்து, "கேப்டன் ஐயா, போர்க்களத்தில் உயிர் போவதைக் காட்டிலும் கொடுமையானது கை, கால்களை, கண் பார்வையை இழந்து போறதுன்னு சொல்லுறாங்களே அது உண்மைதானா? என்று உருக்கமாகக் கேட்டார். 
"உண்மைதான். ஆனாலும் உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கிறது அல்லவா? அதை வைத்துக்கொண்டு இந்த நாட்டுக்கும், வீட்டுக்கும் இன்னும் எத்தனையோ சாதிக்கலாமே, நான் படித்த உணர்வு மிகுந்த உள்ளத்தை உருக்கும் கதை ஒன்றைச் சொல்லவா?'' என்று செழியன் கேட்டவுடன்,
"சொல்லுங்க ஐயா சொல்லுங்க, மத்தவுங்க சொல்லுறதுக்கும் நீங்க சொல்லுறதுக்கும் எத்தனையோ வேறுபாடு உண்டு. ஏன்னா நீங்க துப்பாக்கிய தூக்குறவரு. அதுனால இப்பவே எங்களுக்குச்  "சுடச்சுட'  ஒரு செய்தி சொல்லுங்களேன்'' என்று தமிழையா சிலேடையாகக் கேட்க செழியன் கதையைத் தொடங்கினார்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com