வாட்ஸ் ஆப்பில் தகவல் பரிமாற்றம் அசூர வேகத்தில் நடைபெறுகிறது. ஆனால், ஒரு தகவலை ஒருவருக்கோ, குழுவுக்கோ தவறாக அனுப்பி விட்டால் அதை திரும்பப் பெறவோ, அழிக்கவோ இயலாது என்பது ஒரு பெரிய குறையாக இருந்தது. இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கை எழுந்தது.
பயன்பாட்டாளர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறைவேற்றியுள்ளது.
தவறுதலாக ஒருவருக்கு தகவலோ, செய்தியையோ, புகைப்படத்தையோ, தொலைபேசி எண்களையோ அனுப்பிவிட்டால் 7 நிமிடங்களுக்குள் அந்தத் தகவலை அழித்துவிடலாம். இதற்கு சம்பந்தப்பட்ட இருவரும் தங்களது மொபைல் போனில் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்திருக்க வேண்டும்.
இந்த புதிய சேவையின்படி, ஒரு தகவலை தவறாக மற்றவர்களுக்கு அனுப்பி விட்டால், அந்த நபரின் வாட்ஸ் ஆப்பிற்குள் சென்று அந்தத் தகவலை மீண்டும் செலக்ட் செய்து டெலிட் பொத்தனை அழுத்த வேண்டும்.
அப்போது, "டெலிட் ஃபார் மீ' என்றும் "டெலிட் பார் எவ்ரிஓன்' என்று காண்பிக்கும்.
அதில், "டெலிட் ஃபார் எவ்ரிஓன்' என்பதை அழுத்திவிட்டால், தகவல் அனுப்பியவரின் வாட்ஸ் ஆப்பில் இருந்தும், அந்தத் தகவலைப் பெற்றவர் வாட்ஸ் ஆப்பில் இருந்தும், சம்பந்தப்பட்ட தகவல் அழிந்துவிடும். "டெலிட் ஃபார் மீ' என்று அழுத்தினால் அந்தத் தகவல் அனுப்பியவரின் வாட்ஸ் ஆப்பில் இருந்து மட்டும் அழியும்.
ஆனால், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அனுப்பியவரின் வாட்ஸ் ஆப்பில் "யு டெலிடெட் திஸ் மெசேஜ்' என்றும், பெற்றவரின் வாட்ஸ் ஆப்பில் "திஸ் மெசேஜ் வாஸ் டெலிடெட்' என்றும் காண்பிக்கும்.
மேலும், தவறுதலாக அனுப்பப்பட்ட புகைப்படத்தை ஒருவர் டவுன்லோடு செய்து பார்த்து இருந்தாலும் கூட "டெலிட் பார் எவ்ரிஓன்' என்று அழுத்தினால்போதும், அவரது தொலைபேசியில் வாட்ஸ் ஆப் புகைப்படம் சேமிப்பில் இருந்தே அந்தப் படம் நீக்கப்பட்டுவிடும். இந்த புதிய வசதி வின்டோஸ், ஐஓஎஸ் போன்களிலும் பயன்படுத்தலாம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளியே கிடையாது என்பதையே இது காண்பிக்கிறது.
- அ.சர்ஃப்ராஸ்