கோவை பச்சப்பாளையத்தில் இருக்கும் கல்வித்துணை அமைப்புக்குச் செல்பவர்கள் அங்கே மாணவர்களுக்கான புத்தகங்கள், மாணவர்கள் பயிற்சி பெற கம்ப்யூடர்கள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பயிற்சி அளித்து அவர்களை வேலை வாய்ப்புப் பெறத் தகுதியானவர்களாக ஆக்குவதுதான் கல்வித் துணையின் முக்கிய பணி.
படிப்பைத் தொடராமல் பாதியில் விட்டுவிடும் மாணவ மாணவியரை வரவழைத்து, அவர்கள் படிப்பை முடிப்பதற்கு உதவி, அவர்கள் படித்துத் தேறியதும் வேலை வாய்ப்புப் பெற "கல்வித்துணை' உதவுகிறது என்கிறார் இதன் தலைவர் சிவசுவாமி.
இப்போது இவர் தொடங்கியிருக்கும் புதிய பணி, பாஷ் என்ற ஜெர்மன் நிறுவனத்தோடு இணைந்து, திறன் முன்னேற்றப் பயிற்சி எனப்படும் ஸ்கில் டெவலப்மென்ட் பயிற்சியை அளித்து வருகிறார். பத்தாவது அல்லது பிளஸ் டூ படித்துவிட்டு, படிப்பைப் பாதியில் நிறுத்திவிடுகிறவர்களுக்கு, இரண்டு மாதங்கள் "பாஷ்' நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. வேலைக்கு வாய்ப்பு அளிக்கும் இந்தப் பயிற்சியை கல்வித் துணையும், "பாஷ்' நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன.
இதில் என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன?
"வாடிக்கையாளரிடம் பேசும் பயிற்சி, வாடிக்கையாளர் சேவை, பாஸிடிவ் அணுகுமுறை, வேலைக்கான பேட்டிகளில் கலந்துகொண்டு பதில் சொல்வது, கம்ப்யூடர் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி எல்லாம் அளிக்கிறோம். இதற்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இந்தக் குறுகிய காலப் பயிற்சியின்போது, வேலை வாய்ப்புக்கான திறனை அவர்கள் அளித்துவிடுவார்கள். மொத்த பயிற்சிக்கும் ஐநூறு ரூபாய்தான் கட்டணம். ஆனால் கல்வித்துணை, ஒவ்வொரு மாணவருக்குமான கட்டணமாகவும் தேர்வுக்கும் ரூபாய் இரண்டாயிரம் செலவழிக்கிறது. சேர்வதற்கான வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை. ஐடிஐ படித்த மாணவர்களும் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்'' என்கிறார் சிவசுவாமி.
- சாருகேசி