முக நூலிலிருந்து....
• புல்லாங்குழலில்...
முதல் புள்ளியென்ன,
கடைப்புள்ளி என்ன?
எல்லாம் இசைமயம்.
- நா.வே.அருள்
• அப்பாவின் தொப்பியை மாட்டிக்கொண்டு
"நான் இப்போ போலீசு'
என்ற பெண் குழந்தையிடம்,
"நீ என் அம்மாடா' என்றான்
போலீஸ் அப்பா!
- மானா பாஸ்கரன்
• எல்லா கவிதைப்
புத்தகங்களிலும்...
கவிதை
இருந்தே ஆகவேண்டும்
என்ற கட்டாயமில்லை.
- இரா எட்வின்
• தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும்
என்னைக்கும்
சண்டயே
வந்ததில்ல...
- ஆர்.சி.மதிராஜ்
• என்ன புடலங்கா பெரீய்யய சிவகாசி பட்டாசு?
தீபாவளிக்கு முன்நாள் வீட்டுக்கு மாமனார், மாமியார் வந்தா...
மருமகள் முகம் டிசைன் டிசைனா வெடிக்குமே...
அதுக்கு ஈக்வலா, பவர்ஃபுல் பட்டாசு உண்டா?
- ஏழுமலை வெங்கடேசன்
சுட்டுரையிலிருந்து...
யாருடைய கேள்விக்காவது
விடை தெரியாவிட்டால்
அதற்காக மனதைப் போட்டு
குழப்பாதீர்.
கேட்டவன் உள்பட
அனைத்து உயிர் இனமும்
ஏதும் அறியாமல்தான்
பூமியில் பிறந்திருக்கிறது
- மணவை. சீ.பொ.சீ
• எதையும் புனிதப்படுத்துவது எனக்குப் பிடிக்காது.
ஆனா என் காதலை குறை சொன்னா...
கெட்ட கோவம் வரும் எனக்கு.
- ராஜ் அருண்
• தவிர்க்க முடியாமல் சில இழப்புகள்...
நம்ப முடியாமல் சில துன்பங்கள்...
அனுபவிக்க முடியால் சில சந்தோஷங்கள்...
இவை சேர்ந்தது தான் நம் வாழ்க்கை.
-ராக்கி
• வரலாற்றைத் தொலைத்துவிட்டால்
மொழியில் தேடலாம்.
மொழியைத் தொலைத்துவிட்டு
வரலாற்றைத் தேடமுடியாது.
- ச.மணி
வலைதளத்திலிருந்து...
பெருநகருக்குள் அடங்கிவிட்ட ஒரு மேனாள் கிராமத்தில் ஒத்தவாடை தெரு என்ற பெயரைப் பார்த்தேன். ஒத்தவாடை என்றால் என்னவென்று தெரிய வில்லை. நாளிதழ்களில் வரும் குற்றச்செய்திகளைப் படிக்கும்போது இந்தப் பக்கம் நிறைய ஊர்களில் ஒத்தவாடை தெரு இருப்பது தெரிந்தது. வடமாவட்ட கிராமத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர்தான் சொன்னார். மற்ற தெருக்களில் மேலவாடை, கீழவாடை என இருபுறமும் வீடுகள் இருக்கும். ஒத்தவாடை தெருவில் ஒரு பக்கம் பார்த்தே வீடுகள் இருக்கும். அவற்றுக்குப் பின்னால் கழனிதான் இருக்கும். அதாவது வாடை என்றால் வீடுகளின் வரிசை.
...பின்னர் அகரமுதலி, அகராதி பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன். தெருச்சிறகு, கட்டிடங்களின் வரிசை என்று வாடை என்ற சொல்லுக்குப் பொருளுண்டாம்..
"சே, பெருவாரியாக இன்னும் புழக்கத்தில் உள்ள ஓர் எளிய சொல்லுக்குப் பொருள் தெரியாமல் இருந்திருக்கிறோமே!' என்று கொஞ்சம் வெட்கம்.
தமிழுக்கும் அகராதி, நிகண்டு எல்லாம் பயன்படுத்துங்கள் என்று பெரியவர்கள் சொல்லத்தான் செய்கிறார்கள். நாம் எங்கே செய்கிறோம்?
https://uluvathalayan.wordpress.com