வாகன எரிபொருளின் தேவை உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், சூரிய ஒளி, தண்ணீரைப் பயன்படுத்தி, தூய்மையான "ஹைட்ரஜன்' எரிபொருளை உற்பத்தி செய்யக் கூடிய செயற்கை இலைகளை, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), பூணேவில் உள்ள தேசிய திரவ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக சிஎஸ்ஐஆர் முதன்மை விஞ்ஞானி சின்னகொண்டா எஸ்.கோபிநாத் கூறியதாவது:
புதுப்பிக்கக் கூடிய வளங்களில் இருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதுதான், தற்போது நிலவும் சுற்றுச்சூழல் மற்றும் எரிபொருள் தொடர்பான பிரச்னைகளுக்கு உன்னத தீர்வாக அமையும். மாசு ஏற்படுத்தாத இந்த எரிபொருள்தான், இன்றைய உலகின் முக்கிய தேவையாக இருக்கிறது.
சூரிய ஒளி, தண்ணீர் மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
சூரிய ஒளி, தண்ணீரை பயன்படுத்தி எரிஆற்றலை உற்பத்தி செய்யும் மிக மெல்லிய, கம்பி இணைப்பு இல்லாத கருவியை எங்களது குழு உருவாக்கியுள்ளது.
இலைகளைப் போன்று, இவை தோற்றமளிக்கும். இந்த கருவிகளில் உள்ள செமிகண்டக்டர்களில், சூரிய ஒளி படும்போது, எலக்ட்ரான்கள் ஒருமுகமாக குவிந்து, மின்சக்தி உருவாகும். இந்த மின்சக்தி, நீர் மூலக்கூறுகளை உடைத்து, அதிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்கும்.
தற்போது, நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிமங்களில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வழிமுறையில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி செய்யப்படும்போது அதிக அளவில் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. இது, புவி வெப்பமயமாதலை அதிகரிக்கிறது.
சூரிய ஒளி, தண்ணீர் போன்ற இயற்கை வளங்களில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும்போது சூற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியும். தற்போதைய காலகட்டத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் கார்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எங்களது "செயற்கை இலை'களில் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் கார்கள் இயங்கக் கூடிய காலம் வரும்'' என்று நம்பிக்கைத் தெரிவித்தார் எஸ்.கோபிநாத்.
- எம். கணேஷ்