தொழில்முனைவோராக ஒரு பட்டப் படிப்பு!
தற்போது பெண்கள் உயர்கல்வி கற்று வேலைக்குச் செல்வதும், உயர்பதவி வகிப்பதும் அதிரித்து வருகிறது. பல பெண்கள் தங்களது நிர்வாகத்திறமையை வளர்த்துக் கொண்டு தொழில் முனைவோராகி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
பெண்களைத் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு, கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிரியல் மையத்தில் மகளிர் கல்வி மற்றும் தொழில் முனைதல் என்ற இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு உள்ளது. இது குறித்து மகளிரியல் மையத்தின் டீன் என்.வாசுகி ராஜா நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
"2015 ஆம் ஆண்டு முதல் புதிய படிப்பாக மகளிர் கல்வி மற்றும் தொழில் முனைதல் என்ற முதுகலை பட்டப்படிப்பு எங்கள் கல்லூரியில் தொடங்கப்பட்டது.
இதில் சேருவதற்கு ஏதாவது ஓர் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அதில் 55 சதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலம் ஆண்டுக்கு 20 மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள்.
இதில் பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் பற்றி கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அனுபவ அறிவும் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.
சுய தொழில் செய்வதைக் கற்றுக் கொண்டு முதன்மையான நிறுவனங்களுடன் இணைந்து தொழில் முனைவோராகச் செயல்படுவது, ஏற்கெனவே செய்து வந்த தொழிலை மேம்படுத்துவது, சுய தொழில் செய்வது குறித்து இந்த படிப்பில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பட்டப்படிப்பைப் பயின்ற பெண்கள் எல்லாச் சவால்களையும் மன உறுதியுடன் எதிர் கொண்டு தொழில் முனைவோராக வெற்றி பெற இயலும்.
பயிற்சிகள், கருத்தரங்கங்கள், கருத்துப்பட்டறைகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல், விற்பனை ஆகியவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தொழில் முனைவோராக சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஆண் மற்றும் பெண்கள் சிறப்புரையாற்றுவார்கள்.
ஆண்டு தோறும் மகளிருக்கு மகாமேளா (கண்காட்சி மற்றும் விற்பனை) என்ற சிறப்புச் சந்தை ஏற்படுத்தி அதில் அவர்கள் பங்கு பெற்று அனுபவத்தை பெற்றுக் கொள்வார்கள். வகுப்பறை கல்வி, களப்பணி ஆகியவை வழங்கப்படுகிறது. பெண்களுக்கான அடிப்படைச் சட்டங்கள், ஆரோக்கியம், தலைமைப் பண்பு, திட்ட மேலாண்மை, தொண்டு நிறுவன மேலாண்மை ஆகியவையும் பாடத்திட்டத்தில் உள்ளன. இந்த படிப்பின் மூலம் பெண்கள் தொழில் முனைவோராக மாறி, தங்களது வாழ்க்கைப் பாதையை தாங்களே அமைத்துக் கொள்ள இயலும்'' என்றார்.
- எஸ்.பாலசுந்தரராஜ்