ஊழல் குற்றச்சாட்டுகளால் ஆட்சி கவிழ்வதும் உண்டு. அதே நேரத்தில் ஊழல் நடைபெற்றதை நிரூபிக்க பல ஆண்டுகள் ஆவதும் உண்டு. ஊழல் நடைபெற்றுள்ளதைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் பல ஆண்டுகள் உழைக்க வேண்டியுள்ளது.
இந்தநிலையில், ஊழல் நடைபெற்றுள்ளதா என்பதைக் கணிக்கும் அளவுக்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையில் கணினி மூலம் இயங்கும் இந்த புதிய மென்பொருளை ஸ்பெயின் நாட்டின் வல்லாடாலிட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனித மூளையின் செயல்பாடுகளைப் போல செயலாற்றும் "நியூரல் நெட்வொர்க்ஸ்' மூலம் அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஊழல் நடைபெற்றுள்ளதையும், எதனால் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதையும் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எடுத்துக்காட்டாக, ஸ்பெயின் நாட்டில் 2000-2012-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் வழக்குகள் தொடர்பான தகவல்களை, புள்ளி விவரங்களை இந்த நியூரல் நெட்வொர்க்ஸ் மூலம் ஆராய்ந்து பார்த்ததில் ஊழல் நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழலுக்கான அரசியல், பொருளாதாரக் காரணங்களைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளது.
தற்போது ஸ்பெயின் நாட்டு ஊழல்களைக் கணிக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நியூரல் நெட்வொர்க்ஸ் முறை விரைவில் உலகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருவதாக வல்லாடாலிட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.