முக நூலிலிருந்து....
• எலித் தொல்லையால்
தூங்காமல் கிடந்தேன்.
பொறி வைத்துக் கொன்ற பின்.. அதன் மரணவலி என்னைத்
தொற்றிக்கொள்ள
கண் மூட முடியவில்லை.
- மு.ரா. சுந்தர மூர்த்தி
• உண்மைகள் சந்தேகத்திற்கு
உள்ளாவதால்...
பொய் பேசுவதில்
கிடைக்கும் திருப்தி
உண்மை பேசுவதில்
இருப்பதில்லை.
- தமிழ்மகள் தேவகி
• மனிதர்கள்
சர்வாதிகாரத்தையே
விரும்புவார்கள் என்பதைச்
சிறப்பாக இயங்கும்
whatsapp குழுவிலிருந்து
அறியலாம்.
- கலகலவகுப்பறை சிவா
• சிரிக்கும் குழந்தை...
வேதனையாக இருக்கிறது,
சுமக்கும் பிச்சைக்காரி.
- கவி முத்து
சுட்டுரையிலிருந்து...
• பல வினாக்களுக்கு
புன்னகையை விட...
சிறந்த பதில்
இருப்பதில்லை...
- கருங்குழலி
• எருமைக்கு கூட
புளுக்ராஸ் இருக்கு...
எனக்காக யோசிக்க
உயிரா இருக்கு?
- ஊமை ராணி
• கடிகார நொடி முள் கூட...
ஒவ்வொரு நொடியும்
நின்று...
ரசித்து...
நகர்கிறது.
ஏனோ
இது மனிதனுக்குப் புரியவில்லை.
- தேன்மிட்டாய்
• சாக்கடையில் கல்லெறிந்தால்...
நம் மேல் படும் என
ஒதுங்கிச் செல்வதை...
சாக்கடை
தனக்கான பெருமையாய்
நினைத்துக் கொள்கிறது.
- கோதை
வலைதளத்திலிருந்து...
புத்தகங்களுடன் புழங்குவதற்கான நெருக்கமும், அவற்றை வாசிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்க, அதிகரிக்க புத்தகங்கள் மீதான அளவுக்கதிகமான உடைமை உணர்வு மாறியே விட்டது.
உண்மையில், சரியான நோக்கத்துடன் எழுதப்பட்ட எவருடைய ஒரு நூலும், அது கவிதையோ, கட்டுரையோ, நாவலோ, ஒரு விசித்திரமான மாயக்கம்பளம் தான். அது, தன்னுள் எல்லாவிதமான மந்திரவித்தைகளையும் கட்டுகளாகக் கொண்டிருக்கிறது.
மனிதர்களை விட, புத்தகங்களே மேலானவையாக இருக்கின்றன என்ற கருத்தை எப்பொழுதும் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்காது என்றும் மனம் உறுதியாக நம்புகிறது.
புத்தகங்கள் உறங்குவதே இல்லை. நிரப்பப்பட்ட சொற்களின் முழு உணர்வெழுச்சியுடன் எப்பொழுதும் விழித்திருக்கின்றன.
புத்தகங்கள் ஒரு தனிமனிதனுடன் கொண்டிருக்கும் இடத்தை வேறெந்த ஊடகமும் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.
http://kuttyrevathy.blogspot.in/