திகைக்க வைத்த ரேகா!

யாசர் உஸ்மான்  எழுதியுள்ள நடிகை ரேகாவின் வாழ்க்கைப் பகுதிகள் அடங்கிய நூல்; "தி அன்டோல்டு ஸ்டோரி'.
திகைக்க வைத்த ரேகா!

யாசர் உஸ்மான்  எழுதியுள்ள நடிகை ரேகாவின் வாழ்க்கைப் பகுதிகள் அடங்கிய நூல்; "தி அன்டோல்டு ஸ்டோரி'. இதில் வரும் சம்பவங்கள் பரபரப்பானவை. அதிலிருந்து ஒரு பகுதி:

அன்றைய தினம் மெஹ்பூப் ஸ்டியோவில் ரேகா - பிஸ்வஜித் காதல் காட்சி "அஞ்சனா சஃபர்' படத்திற்காக படமாக்கப்பட்டது. அது படத்தின் முதல் காட்சி என்பதால் டைரக்டர்ராஜா நவாதே, பிஸ்வஜித்திற்கு தன்னுடைய திட்டத்தை விளக்கினார். ஆனால் ரேகாவுக்கு காட்சியை பற்றி விளக்கவில்லை. படபிடிப்பு துவங்கியது. ராஜா நவாதே ஆக்ஷன் என்று கூறியவுடன், ரேகாவை தன்கைகளால் தூக்கியெடுத்த பிஸ்வஜித், ரேகாவின் உதடுகளில் தன் உதடுகளை அழுந்த பதித்தார்; ரேகா அதிர்ச்சியடைந்தார். இந்த முத்தக் காட்சியைப் பற்றி டைரக்டர் அவரிடம் கூறவில்லை. கேமரா ஓடிக் கொண்டிருந்தது. டைரக்டர் " கட்'  என்று சொல்லும் வரை பிஸ்வஜித்தும் தன் உதடுகளை எடுக்கவில்லை. யூனிட்டில் இருந்தவர்கள் உற்சாகத்துடன் விசில் அடித்தனர். அதன்பின்னர்தான் பிஸ்வஜித், ரேகாவை தன் பிடியிலிருந்து விடுவித்தார். காட்சியின்போது தன் கண்களை ரேகா அழுத்தமாக மூடிக் கொண்டாலும் பின்னர் அவரது கண்களிலிருந்து கண்ணீர்வழிந்தது.  

இது தன்னுடைய தவறு இல்லை. டைரக்டர் கொடுத்த ஐடியாப்படி முத்தமிட்டதாக பிஸ்வஜித்  ரேகாவிடம் கூறினாலும், தன்னிடம் கூறாமல் டைரக்டர் இந்தக் காட்சியை எடுத்தது தவறு என்று சொன்னாராம் ரேகா.

1980-ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் நாள் ஆர்.கே.ஸ்டுடியோ ரிஷிகபூர் - நீத்துசிங் திருமணம். நீத்துசிங் தனக்கு நெருங்கிய தோழி என்பதால் அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரேகா சென்றிருந்தார். அமிதாப்பச்சன், ஜெயா பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட பல  மும்பை படவுலக பிரபலங்கள் அங்கு வந்திருந்தனர். அமிதாப், மன்மோகன் தேசாயுடன் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க, ஜெயாபச்சன் அவரது மாமியார் தேஜிபச்சனுடன் அமர்ந்திருந்தார். 

ரேகா உள்ளே நுழைந்தவுடன் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளை சேலை உடுத்தியிருந்த ரேகாவின் நெற்றி உச்சியில் சிவப்பு குங்குமம் கழுத்தில் மாங்கல்யமும் காணப்பட்டது. ரிஷிகபூர் - நீத்துசிங் பக்கம் இருந்த கேமரா தானாகவே ரேகா பக்கம் திரும்பியது. "ரேகாவுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?' என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது.    

ரிஷிகபூர் - நீத்துசிங்கை பாராட்டிவிட்டு திரும்பிய ரேகா, ஆர்.கே. ஸ்டுடியோ தோட்டத்தின் நடுவே வந்து நின்றார். அனைவரது பார்வையும் அவர் மீதே இருந்தது. ஆனால் ரேகாவின் பார்வையோ அமிதாப் மீதே தீர்க்கமாக பதிந்திருந்தது.

ரேகா - அமிதாப்பை காதலித்ததும் பின்னர் காதல் முறித்து அமிதாப் - ஜெயா பச்சனை மணந்ததும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். இந்த நேரத்தில் ரேகா மீண்டும், அமிதாப்பை உற்று பார்த்தது புதிராக இருந்தது. ஆனால் ரேகா எதை பற்றியும் கவலைப்படாமல் தன்னுடன் வந்திருந்த நெருங்கிய சிநேகிதியும், தனக்கு டயட், உடற்பயிற்சி போன்றவற்றில் அறிவுரை வழங்கும் டாக்டர் ஸ்நேகலதா பான்டேவையும் அழைத்துக் கொண்டு நேரே அமிதாப்பிடம் சென்றார். ரேகா வந்தது முதல் அவரையே கண்கானித்து கொண்டிருந்த ஜெயா பரபரப்படைந்தார். அமிதாப்பிடம், ரேகா சகஜமாக உரையாடி கொண்டிருந்தாலும் ஜெயா தலையை குனிந்தபடி கண்ணீர்விட்டதாக "ஸ்டார் டஸ்ட்' பத்திரிகை அச்சம்பவத்தை குறிப்பிட்டிருந்தது.

சில நிமிடங்கள் பார்வையாளர்கள் அனைவருமே என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க எதுவுமே நடக்காதது போன்று ரேகா புறப்பட்டார். அவர் அணிந்திருந்த மாங்கல்யம், நெற்றி வகிட்டில் குங்குமம் பற்றி சில நிருபர்கள் ரேகாவிடம் சென்று கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே கூறினாராம் "படப்பிடிப்பில் அணிந்திருந்த காஸ்ட்யூமுடன் நேரே இங்கு ரிசப்ஷனுக்கு வந்துவிட்டேன். நீங்கள் நினைப்பது போன்று திடீர் திருமணம் ஏதும் நடக்கவில்லை'' என்றாராம்.

- அ.குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com