சமையல்... சமையல்... சமையல்...!

மேற்கூறிய அனைத்து பொருள்களையும்சுத்தம் செய்துவிட்டு 4-5 மணி நேரம் தண்ணீரில்
சமையல்... சமையல்... சமையல்...!

சிகப்பு அவல் தோசை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - 3 கிண்ணம்
முழு உளுந்து - 1 கிண்ணம்
சிகப்பு அவல் - 1 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை: மேற்கூறிய அனைத்து பொருள்களையும்
சுத்தம் செய்துவிட்டு 4-5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.  பிறகு அரிசியுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். உளுந்தும், அவலும் சேர்த்து நன்றாக மைய அரைக்கவும். (அரைக்கும் போது உப்பு சேர்க்க வேண்டாம்). இரவு அரைத்து வைத்து மறுநாள் தோசை வார்த்தால் மிகவும் மிருதுவாக வரும்.
பயன்கள்: சிகப்பு அவலில் பி.விட்டமின் சத்து உள்ளது. இது நரம்புகளை உறுதிப்படுத்தும்.

கொள்ளு இட்லி பொடி

தேவையானவை:
கொள்ளு - அரை கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம்
கருப்பு எள் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 5
கட்டி பெருங்காயம்  - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை: வாணலியை சூடு செய்து அதில் கொள்ளை நன்றாக வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு உளுத்தம் பருப்பை சிவக்கும் வரை வறுக்கவும். கருப்பு எள்ளை வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு, சிறிது எண்ணெய்விட்டு மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுக்கவும். வறுத்த பொருள்கள் அனைத்தும் சூடு ஆறிய  பிறகு மிக்ஸியில்  முதலில் மிளகு, எள்ளைப்போட்டு நன்றாக அரைத்த பிறகு பருப்பு, கொள்ளு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கவும்.
குறிப்பு: காரம் குறைக்க சிறிது பனை வெல்லப் பொடி சேர்த்துக் கொள்ளலாம். அதில் இரும்புச் சத்து உள்ளது.  கொள்ளு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்க வல்லது. எள்ளு இரும்பு சத்து மிக்கது, உளுத்தம்பருப்பு கால்சியம் மிகுந்தது.

வரகு அரிசி குணுக்கு

தேவையானவை:
வரகு அரிசி - முக்கால் கிண்ணம்
புழுங்கல் அரிசி - முக்கால் கிண்ணம்
துவரம் பருப்பு - கால் கிண்ணம்
பயத்தம் பருப்பு - அரை கிண்ணம்
மிளகாய் வற்றல் - 5
உப்பு - தேவையானவை
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
கோஸ் அல்லது சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
கொத்துமல்லி - 1 கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: மேற்கூறிய பொருள்களில் அரிசி, பருப்பு வகைகளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, ஊறிய அரிசி, பருப்பு வகைகளுடன் மிளகாய்வற்றல் சேர்த்து கொரகொரவென்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் உப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி, கோஸ் அல்லது சின்ன வெங்காயம் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய வைத்து கலந்து வைத்துள்ள மாவு கலவையை சிறிது சிறிதாக கிள்ளி போடவும்.   நன்றாக வெந்து சிவந்து வந்ததும் எடுத்துவிடவும். சுவையான வரகு அரிசி குணுக்கு தயார்.

பச்சை சுண்டைக்காய் வெந்தய குழம்பு

தேவையானவை:
பச்சை சுண்டைக்காய் - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 5 பல்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய்  வற்றல்- 2
பெருங்காயம் - சிறிது
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
பனை வெல்லப் பொடி - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
 செய்முறை: புளியை நன்கு கரைத்து கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயம், மிளகாய்வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து சின்ன வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை சுண்டைக்காய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர், தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளி கரைசல் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு,  மிளகாய்த் தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். (எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிடவும்). பின்னர், தனியாப் பொடி, பனை வெல்லப்பொடி சேர்த்து இறக்கவும். பச்சை சுண்டைக்காய் வெந்தயக் குழம்பு தயார். சூடான சாதத்தில் நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிடவும்.
பயன்கள்: பசியைத் தூண்டும், செரிமானத்திற்கு உகந்தது, வயிற்றிலுள்ள பூச்சிகள் அழியும், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும். மாதத்தில் ஓரிரு நாள் சாப்பிடலாம்.

வெந்தயக் கீரை பயத்தம் பருப்பு கூட்டு

தேவையானவை:

சிறிய வெந்தயக் கீரை - 2 கிண்ணம்
பயத்தம் பருப்பு - அரை கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை கிண்ணம்
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
மிளகு, சீரகப் பொடி - தலா 1 தேக்கரண்டி
தேங்காய்பத்தை - 1 துண்டு (தேவை என்றால்)
தனியாத் தூள் - சிறிது
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 தேக்கரண்டி
 செய்முறை: குக்கரில் எண்ணெய்விட்டு  தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும். பிறகு ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை  வதக்கி, பின்னர், 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து அத்துடன் பயத்தம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். பின்னர்,
பிரஷர் போனதும் மிளகுப் பொடி, சீரகப்பொடி, தனியாப் பொடி சேர்த்து ஒரு கொதி விடவும். ( அரைத்த தேங்காய் விழுது தேவையென்றால் சேர்க்கவும்). இறக்கும்போது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கவும். சுவையான, சத்தான வெந்தயக்கீரை பயத்தம்பருப்பு கூட்டு தயார்.
குறிப்பு: இதில் வெங்காயம், பூண்டு இல்லாமல் செய்துள்ளேன். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது, இரும்பு சத்து நிறைந்தது. நார்ச் சத்து மிக்கது.

வேர்க்கடலை துவையல்:

தேவையானவை:
வறுக்காத காய்ந்த வேர்க்கடலை  - 1 கைப்பிடி
சௌசௌ தோல் - 2 கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை தேக்கரண்டி
முழு உளுந்து - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
புளி - நெல்லிக்காய் அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை வதக்கவும். பின்னர் சௌசௌ காயின் தோல், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, புளியும் சேர்த்து வதக்கவும். வேர்க்கடலையைத் தண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்து கொள்ளவும். மேற்கூறிய அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். வேர்க்கடலை துவையல் தயார். மிகவும் சுவையாக இருக்கும். சூடான சாதத்தில்  பிசைந்தும் சாப்பிடலாம். தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இது சத்து நிறைந்தது. ஊறவைத்த கடலை உடம்புக்கு நல்லது.

இந்தவார சமையல் குறிப்புகளை வழங்கியவர் லட்சுமி ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com