51 வருட இந்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் முதன் முதலாக காமாண்டோ படை பிரிவின் அதிகாரியாக தேர்வாகியிருக்கிறார் தனுஸ்ரீ பரீக்(25).
அந்நிய நாட்டிடமிருந்து இருபத்து நான்கு மணிநேரமும் இந்திய நாட்டை பாதுகாப்பவர்களே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள். நமது நாட்டின் 76 எல்லை பாதுகாப்பு முகாம்களில் 73 இடங்களில் களத்தில் நேரடியாக நிற்பவர்களும் இவர்களே.
1965-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் பிஎஸ்எப் பிரிவில் தற்போது, இரண்டரை லட்சம் பேர் எல்லையைப் பாதுகாக்கும் புனித பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பல பெண்கள் இருந்தாலும், அலுவலகப்பணி மற்றும் உதவியாளர் பணிகளில்தான் இதுவரை பணியாற்றி வந்துள்ளனர். அவர்களில் முதன் முறையாக துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு களத்தில் இறங்குவதுடன், தனது படையினரை ஆணையிட்டு வழிநடத்திச் செல்லும் அதிகாரியாகவும் தேர்வாகியிருக்கிறார் தனுஸ்ரீ பரீக்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீரை சேர்ந்தவரான தனுஸ்ரீ, 2014-ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் எல்லைப் பாதுகாப்புப் படை அகாடமியில் 52 வாரங்களாக வழங்கப்பட்ட கடுமையான பயிற்சி மற்றும் சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றார். அதனடிப்படையில் அதிகாரியாகவும் தேர்வு ஆனார். இவருக்கான முதல் வேலை வாய்ப்புப் பணியே பஞ்சாபில் உள்ள இந்திய-பாக் எல்லைப் பகுதிதான்.
தனுஸ்ரீக்கான பட்டயத்தை தோளில் அணிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "உனது தோளில் நீ சுமந்து கொண்டிருப்பது எல்லை பாதுகாப்பு படைப் பிரிவின் பெருமையை மட்டுமல்ல, பெண்ணினத்தின் பெருமையையும் சேர்த்துதான்'' என்றாராம்.
-ஸ்ரீ.