டாக்டரைக் கேளுங்கள்: மகளிர் சிறப்பு மகப்பேறு மருத்துவர். டாக்டர் எழிலரசி பிரசன்னா பதிலளிக்கிறார்

டாக்டரைக் கேளுங்கள்: மகளிர் சிறப்பு மகப்பேறு மருத்துவர். டாக்டர் எழிலரசி பிரசன்னா பதிலளிக்கிறார்

கர்ப்பமாக இருக்கும்போது தாம்பத்திய உறவு எத்தனை மாதம் வரையில் வைத்துக் கொள்ளலாம்.

கர்ப்பமாக இருக்கும்போது தாம்பத்திய உறவு எத்தனை மாதம் வரையில் வைத்துக் கொள்ளலாம். இதனால், சிசுவின் வளர்ச்சியில் ஏற்படும் நன்மை தீமை பற்றி விளக்குவீர்களா?
- சத்தியவாணி, கோயம்புத்தூர்.
கர்ப்பமாக இருக்கும்போது எத்தனை மாதங்கள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது என்பது அந்தந்த தம்பதியரின் விருப்பத்தைப் பொருத்தது. மருத்துவ ரீதியான காரணங்களுக்காக கணவன் மனைவி  உறவு கூடாது என மருத்துவர் பரிந்துரை செய்தாலன்றி,  தம்பதியினர் தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டியதில்லை.  கர்ப்பகாலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது சுகப்பிரசவத்திற்கு வழி வகுக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை மட்டுமே. நான் கடந்த வாரங்களில் குறிப்பிட்டதுபோல் சுகப்பிரசவத்திற்கு இவை மட்டுமே போதாது. பிறப்பு வழிப்பாதை குழந்தை பிறப்பிற்கு ஏதுவாக இருத்தல் மிகவும் அவசியம். மேலும் கர்ப்பகால தாம்பத்தியம், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தாய்க்கு மாற்றங்களை ஏற்படுத்துமே தவிர சிசுவின் வளர்ச்சியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

டாக்டர் எனக்கு வயது 44. ஒரு சுகப் பிரசவமும் இரண்டு சிசேரியனும் ஆனது. முதல் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. மூன்றாவது குழந்தை பிறந்து 7 வருடம் ஆகிறது. எனது வயிறு தளர்ந்து மிகவும் பெரிதாக உள்ளது. எனக்கு உடற்பயிற்சி செய்ய ஆசையாக உள்ளது. நான் ஜிம்முக்கு செல்லலாமா? எல்லாவிதமான உடற்பயிற்சிகளையும் செய்யலாமா? இரண்டு முறை சிசேரியன் செய்திருப்பதால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?
- இரா.குளஞ்சி தேவி, புதுச்சேரி. 
தாங்கள் மூன்று முறை கருவுற்று இருந்த காரணத்தினால் வயிற்றுத் தசைகள் வலுவற்றுப் போயிருக்கும். சுகப்பிரசவம் என்றால் ஆறு வாரங்களுக்குப் பிறகும், சிசேரியன் என்றால் மூன்று மாதங்களுக்குப் பிறகும், உடற்பயிற்சி நடைப்பயிற்சி குறிப்பாக வயிற்றுத் தசைக்கான பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு குழந்தை பிறப்பிற்குப் பின்பும் நீங்கள் இதைக் கடைப்பிடித்திருந்தால் உங்களுடைய வயிறு ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கும். இப்போதும் பாதகமில்லை. நீங்கள் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தாராளமாக உடற்பயிற்சி நிலையம் செல்லலாம்! உங்கள் வயது 44 என்று குறிப்பிட்டுள்ளீர்கள். முதுகுத்தண்டு, கால் மூட்டு சம்பந்தமான பிரச்னைகள் ஏதும் இல்லையெனில் உடல் பயிற்சியாளர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். கட்டுக்கோப்பான உடலைப் பெற வாழ்த்துகள் சகோதரி!

இதை என் தோழிக்காக கேட்கிறேன். என் தோழியிடமும் அவர் கணவரிடமும் எந்தவித குறைகளும் கிடையாதாம். மருத்துவ சோதனைகளிலும் குறைகள் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், கரு தரிக்கவில்லை. கணவன் மனைவி இருவரும் 3 ஆண்டுகளுக்குமேல் இணைந்து வாழ்ந்தும் கரு தரிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? 
-சாயிரா பானு, மதுரை. 
இதை UNEXPLAINED INFERTILITY (விவரிக்க இயலாத காரணங்கள்) என்று கூறுவோம். மேலோட்டமாகப் பார்க்கும்போது பிரச்னைகள் இல்லை என்றுதான் கூற முடியுமே தவிர பிரச்னையே இல்லை என்று கூறி விட முடியாது. நம்மால் கண்டுபிடிக்க முடியாத பல நுண்ணிய காரணங்களால் கரு தங்காமல் தள்ளி போகலாம். இதுபோன்ற தம்பதியினருக்கு NTRAUTERINE INSEMINATION  எனப்படும் IUI  நல்ல பலன் அளிக்கும். IUI  சிகிச்சை முறைக்குப் போவதற்கு முன் சில பரிசோதனைகள் செய்வது முக்கியம். எனவே உங்களுடைய தோழியை அருகிலிருக்கும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறச் சொல்லுங்கள். விரைவில் குழந்தை பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

மாதவிடாய் காலங்களில் தம்பதிகள் இணைந்திருப்பதால் நோய்தொற்று ஏற்படும் என்று கூறுவது உண்மையா?
- சுகந்தி, விழுப்புரம்.
நோய்த் தொற்று ஏற்படும் என்பதைவிட, நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறலாம். மாதவிடாய் காலங்களில் மகளிர்க்கு நல்ல ஓய்வு தேவை என்பதால்தான் தொட்டால் தீட்டு என்று பெண்களைத் தள்ளி வைத்து அந்த மூன்று நாள்களில் அவர்களுக்கு முழு ஓய்வு அளித்தனர் நம் முன்னோர்கள்! எனவே மாதவிடாய் காலங்களில் தாம்பத்யம் தவிர்ப்பது நன்று. தம்பதியினர் விரும்பினால் இணைந்திருக்கலாம் தவறொன்றும் இல்லை. அது அவர்கள் விருப்பத்தைப் பொருத்தது.

எனக்கு வயது 30. திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். வருடம் ஒருமுறை தான் வருவார். அதுவும் 20 நாள்கள்தான் இருப்பார். நான் குழந்தை பெற்றுக்கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்.  ஆலோசனை கூறுங்கள்.
- பாக்யலட்சுமி, சென்னை.
திருமணமாகி, கணவன் மனைவி இருவரும் ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த நிலையில் கருத்தரிக்கவில்லை என்றால் நாம் குழந்தையின்மை பிரச்னையாக எடுத்துக்கொள்வோம். ஆனாலும் உங்களுக்கு அப்படியல்ல, உங்கள் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் உங்களுக்கு அதுபோல் ஒரு குறியீட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. உங்களுக்கு SPERM BANKING எனப்படும் விந்தணு வங்கி முறை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த வசதி எல்லா கருத்தரிப்பு மையங்களிலும் பரவலாக இருக்கும்.  உங்கள் கணவரின் விந்தணுக்களை நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இது குறித்த முழு விவரம் அறிந்திட  உங்கள் அருகில் இருக்கும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரையோ அல்லது கருத்தரிப்பு மையத்தையோ அணுகவும்.

எனக்கு பேத்தி பிறந்திருக்கிறாள். என் மகளுக்கு முதல் சுகப் பிரசவம் மூலம் பிறந்தவள். பிறந்தது முதல் குழந்தை தாயின் மார்பில் பால் குடிக்கமாட்டேன் என்கிறாள். அதனால் தாய்ப்பாலை பீய்ச்சி எடுத்து பாலாடை, சங்கு, ஸ்பூன் மூலம் கொடுக்கிறோம். இது சரியா தவறா... குழந்தை தானாகவே தாய்மார்பில் தாய்ப்பால் அருந்துவதற்கு என்ன செய்யவேண்டும்?
-மரியம்பீவி, பெருங்குடி.
தாய்ப்பாலை பீய்ச்சி எடுத்து பாலாடை, சங்கு, ஸ்பூன் மூலம் கொடுப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் குழந்தை நேரடியாக தாயின் மார்பில் குடிக்கும்போது சுரக்கும் பாலைவிட இவ்வாறு பீய்ச்சி எடுக்கும் பால் மிகக் குறைவாகவே இருக்கும். எனவே பீய்ச்சி கொடுக்கும்போது குழந்தைக்குப் போதுமான தாய்ப்பால் கிடைக்காது. நாளடைவில் பால் இல்லாமல் போகும்.  மேலும் குழந்தை, தாயின் மார்பில் பால் பருகும்போது, வரக்கூடிய Mother - Child Bonding (தாய் சேய் பிணைப்பு) பால் பீய்ச்சி கொடுக்கும்போது வராமல் போகலாம். குழந்தை தாயின் மார்பில் பால் பருகினால்,  நரம்புகள் தூண்டப்பட்டு குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கும். மிக முக்கியமாக, தாயின் மார்பில் பால் பருகுதல் (SUCKLING) என்பது பச்சிளங் குழந்தைக்கான ஒரு பயிற்சியும்கூட. எனவே நீங்கள் பாலாடை, ஸ்பூன் மூலம் பால் புகட்டுவதைத் தவிர்த்து அடிக்கடி, குழந்தையை மார்பில் பால் புகட்டிப் பழக்குங்கள். ஆரம்பத்தில் சிறிது சிரமமாக இருக்கும். ஆனால் ஒரு சில நாள்களில் குழந்தை மார்பில் பால் பருகப் பழகிக் கொள்ளும். கவலை வேண்டாம்!
தொகுப்பு: ப. ரவி வர்மன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com