சிறுவயதில் மணிக்கணக்காக ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டும் குழந்தைகள் வளர்ந்த பின்னர் ஆர்வம் குறைந்து வேறு துறைகளில் கவனத்தை திருப்புவதுண்டு. பெங்களூரைச் சேர்ந்த அர்ச்சனா சீனிவாசனை பொறுத்தவரை சிறுவயதில் ஓவியம் வரைவதில் ஏற்பட்ட ஆர்வத்தை பொழுதுபோக்காக தொடர்ந்ததால், குழந்தைகளுக்காக கதை எழுதும் பிரபல ஆங்கில நாவலாசிரியர் ரஸ்கின் பான்ட் எழுதும் புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
டீன்-ஏஜ் பருவத்திலேயே ரஸ்கின் பான்டின் படைப்புகளை விரும்பி படித்து வந்த அர்ச்சனா, தானே உருவாக்கிய சில அட்டைப் படங்களை அவருக்கு அனுப்பி வைத்தார். அர்ச்சனாவின் வித்தியாசமான கிரியேட்டிவ் பாணி அவருக்கு பிடித்து போகவே, தன்னுடைய புத்தகங்களை வெளியிடும் பெங்குவின் பதிப்பகத்திற்கு அறிமுகப் படுத்தினாராம். இதுவரை ரஸ்கின் பான்டின் 17 புத்தகங்களுக்கு அட்டைப் படங்கள் வரைந்துள்ள அர்ச்சனா, தன் அனுபவத்தை இங்கே கூறுகிறார்:
"புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைவது எளிதானதல்ல. புத்தகம் வெளியாவதற்கு முன் தயாராகும் பிரதியை முழுமையாகப் படித்து, மனதில் தோன்றும் கருத்தை வாசகர்கள் விரும்பும் வகையில் கொண்டு வருவதற்கு நான்கைந்து டிசைன்களை உருவாக்கி, படைப்பாளியிடம் கொடுத்து, அதில் ஒன்றை அவர் தேர்வு செய்ய வேண்டும். அது பதிப்பகத்தாருக்கும் பிடிக்க வேண்டும். நான் வரையும் ஓவியம் கதையுடன் ஒத்துப்போக வேண்டும்''. என்கிறார் அர்ச்சனா.
- பூர்ணிமா